மட்டக்களப்பில் புதிய அரசியல் கட்சி உருவாக்கம் — தீவிர முன்னேற்பாடு

மட்டக்களப்பு கிரான் பகுதியில் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதில், பெரும்பாலான முன்னாள் போராளிகள், முன்னாள் தளபதிகள் மற்றும் தேசிய உணர்வாளர்கள் இணைந்து புதிய கட்சியின் தலைமையகத்தை நிறுவுவதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மாவீரர் வாரத்தை முன்னிட்டு குறித்த கட்சியை தேசிய அரசியல் கட்சியாக அங்குரார்ப்பணம் செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. இதனிடையே, கட்சியின் தலைமைச் செயலகத்தை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் கட்சியின் கருணா அம்மானுடன் இருந்துவிட்டு அவருடைய கட்சிக்கு எதிராக அவர் இருக்கின்ற அதே கிரான் மண்ணிலேயே, மாவீரர் குடும்பங்களின் ஆதரவு மற்றும் முன்னாள் போராளிகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியல் சக்தியை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் முன்னாள் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா சரவணா தலைமையில் புதிய கட்சி உருவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் ஜெயா சரவணா அவர்களிடம் தொடர்பு கொண்டு வினவிய போது,
தற்போது புதிய கட்சியை புதுப் பொலிவுடன் ஆரம்பிக்க தேவையான முன் ஏற்பாடுகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.
போலி தமிழ் தேசியம் பேசி தமிழ் தேசியத்தையும், மக்களையும் ஏமாற்றி வரும் போலி தமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக செயற்படும் கட்சியே எமது கட்சி.
எமது எதிரியை தீர்மானித்துவிட்டு தான் களத்தில் இறங்கியிருக்கிறோம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.
![]()