உலகம்

பிரித்தானியாவில் தொடருந்தில், இரத்தக் களரி!; 9 பேர் உயிருக்குப் போராட்டம்!

ஓடும் தொடருந்தில் நடந்த பயங்கர கத்திக்குத்து தாக்குதல் – இருவர் கைது; தீவிரவாத சதியா என விசாரணை!

லண்டன்: பிரித்தானியாவில் அமைதியான சனிக்கிழமை இரவு, ஒரு கொடூரமான பயங்கரத்தால் உறைந்து போனது. லண்டனை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு தொடருந்தில் நடந்த திடீர் கத்திக்குத்துத் தாக்குதலில் 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 9 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் , “உயிருக்கு ஆபத்தான நிலையில்” அவர்கள் போராடி வருவதாகப் பிரித்தானிய போக்குவரத்து காவல்துறை (BTP) அறிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (நவம்பர் 1) இரவு உள்ளூர் நேரம் சுமார் 19:40 மணியளவில் (பாரிஸ் நேரம் இரவு 20:40), புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நகருக்கு அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. லண்டனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தொடருந்தில், திடீரென அபாய அலாரம் ஒலிக்கத் தொடங்கியது.

உடனடியாக, லண்டனுக்கு வடக்கே சுமார் 120 கி.மீத்தொலைவில் உள்ள ஹண்டிங்டன் (Huntingdon) தொடருந்து நிலையத்தில் தொடருந்து நிறுத்தப்பட்டது. அங்கு ஆயுதமேந்திய காவலர்கள் தொடருந்தைச் சுற்றி வளைத்தனர்.

தொடருந்து பயணித்தவர்கள், தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத கொடூரத்தைக் கண்டுள்ளனர்.”தி டைம்ஸ்” பத்திரிகைக்குப் பேட்டியளித்த பயணிகள், “ஒருவன் கையில் பெரிய கத்தியுடன் தொடருந்து அங்கும் இங்கும் ஓடியதாக” தெரிவித்தனர்.

உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, பல பயணிகள் தொடருந்து கழிவறைகளுக்குள் புகுந்து கதவுகளைப் பூட்டிக்கொண்டனர்.ஒரு பயணி, “ஒருவர் தன் கையில் ரத்தம் சொட்டச் சொட்ட, ‘அவர்களிடம் கத்தி இருக்கிறது!’ என்று அலறியபடி ஓடினார்” எனப் பதற்றத்துடன் கூறினார்.”எங்குப் பார்த்தாலும் ரத்தமாக இருந்தது” என மற்றொரு பயணி ஸ்கை நியூஸ் (Sky News) ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

தொடருந்து நின்றதும், நடைமேடையில் கத்தியுடன் நின்றிருந்த ஒருவனை, காவலர்கள் “டேசர்” (Taser) எனப்படும் மின்சாரத் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி மடக்கிப் பிடித்ததை நேரில் கண்டதாக ஒரு பயணி குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் “மிகுந்த கவலையளிக்கிறது” எனப் பிரித்தனியா பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும், தாக்குதலுக்கான காரணம் என்னவென்று உடனடியாகத் தெரியவரவில்லை. “சம்பவத்தின் காரணங்கள்குறித்து யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” எனக் காவல்துறை ஆணையர் கிரிஸ் கேசி கேட்டுக்கொண்டுள்ளார்.

இருப்பினும், இந்தச் சம்பவத்தின் கொடூரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, பிரித்தானிய தீவிரவாத தடுப்புப் பிரிவினர் (Anti-terrorist services) இந்த விசாரணையில் இணைந்துள்ளனர். இது தனிப்பட்ட சண்டையா அல்லது திட்டமிடப்பட்ட தீவிரவாத சதியா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலால், லண்டன் வடகிழக்கு தொடருந்து (LNER) வழித்தடத்தில் தொடருந்துகள் ரத்து செய்யப்பட்டு, பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *