இலங்கை

தாவும் அரசியல் தேவையில்லை – எதிரணிக் கூட்டிலிருந்து மக்கள் போராட்ட முன்னணி விலகல்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்குத் தமது கட்சி ஆதரவு வழங்காது என்று மக்கள் போராட்ட முன்னணி அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் ஜனநாயக விரோத நடைமுறைகளுக்கு எதிராக நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் கூட்டம் மற்றும் எதிர்ப்புப் பேரணியை நடத்துவதற்கு எதிரணிகள் ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி கூட்டத்துக்கு ஆதரவு அளிக்கப்படுமா என மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் லஹிரு வீரசேகரவிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளிக்கையில், மேற்படி கூட்டு நடவடிக்கைக்குத் தமது கட்சியின் ஆதரவு இல்லை என அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.

“நாம் கொள்கை அடிப்படையில் அரசியல் நடத்தி வருகின்றோம். எனவே, ஏதேனும் பிரச்சினை வரும்போது அதிகாரத்துக்காக, நாடாளுமன்ற ஆசனத்துக்காக அந்தப் பக்கம், இந்தப் பக்கம் என தாவும் அரசியல் எமக்கு ஏற்புடையது அல்ல,” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகின்றது. மக்கள் மத்தியில் அரசாங்கம்மீது அதிருப்தி உள்ளது. அதேபோல மக்களால் நிராகரிக்கப்பட்ட எதிரணிகளே நாட்டில் உள்ளன. எனவே, எம்மால் எதிரணிகளுடன் இணைந்து செயற்பட முடியாது. அந்தவகையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவளிக்க மாட்டோம். ஏனெனில் எமது கொள்கையும், அவர்களின் கொள்கையும் வெவ்வேறானவை,” என லஹிரு வீரசேகர மேலும் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *