மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் இந்தியா…. ஏலையா க.முருகதாசன்

இந்தியா இலங்கைக்குப் பக்கத்து நாடாக இருப்பதில் சாதகமான சூழ்நிலையைவிட அரசியல் ரீதியான பாதகமான சூழ்நிலையே அதிகரித்து வருகின்றது.
இந்தியா, இலங்கைத் தமிழரை வைத்து எவ்வாறு பகடைக்காய் உருட்டியது என்பதும்,அதே சம ஆட்டமாக இலங்கை அரசை தமிழருக்கெதிராக தூண்டியது என்பதை அறிந்து கொள்ள இலங்கைத் தமிழர்கள் எவரும் சதியரசியலில் கலாநிதிப் பட்டம் பெற வேண்டியதில்லை. எல்லாருக்கும் அது புரியும்.
தமிழர்களில் பெருமளவாக இல்லாவிட்டாலும் தாம் கூறவந்த அரசியல் சூட்சும அறிவினை விளங்கப்படுத்திய விபரப்படுத்திய கணிசமான தமிழர்கள், தமிழ்த் தலைவர்கள் தமீழீழ உணர்ச்சிக் கயிறுகளால் தமிழர்களைக் கட்டி ஒரு திசைநோக்கி இழுத்தக் கொண்டு சென்றதைத் தவறென்று சுட்டிக்காட்டிய போது அதனை யாரும் காதுகொடுத்துக் கேட்கவும் இல்லை,.மாற்றுக்கருத்தினர் அப்படி என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பதைக் கவனத்தில் எடுக்கவும் இல்லை.
இந்தியாவின், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் அரசியல் தந்திரமுறையில் மிகமகிழ்ந்து உச்சி குளிர்ந்து எல்லாமே நீங்கள்தான் எனத் தமிழ்த் தலைவர்கள் புளகாங்கிதம் அடைந்தனர்.
நாம் பேசியிருக்கிறோம்,அவர்கள் இலங்கையரசுடன் பேசுவதாக உறுதியளித்திருக்கிறார்கள் எனப் பத்திரிகைகளில் அறிக்கைகளைவிட்டு இந்தியப்பயணம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது என்ற முற்றுப்புள்ளியுடன் இந்திய இராஜதந்திர அரசியலாளர்களைச் சந்தித்த புகைப்படங்களுடன் தவணை நகர்வு நிறைவுபெறும்.
தமிழ்த் தலைவர்கள் அனைவருமே மிகப் படித்தவர்கள்.அரசியல் அனுபவங்கள் நிறைந்தவர்கள்.எனினும் இத்தலைவர்களுக்கு இந்தியாவின் மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் தந்திரத்தை ஏன் ஊகிக்க முடியாமல் போனது என்பது தெரியவில்லை.
இறுதியில் ஆயுதப் போரில் தவனை நகர்வு நிறைவுபெற்ற போது இலங்கையை என்றுமே குழப்பத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதில் தண்ணீர் ஓடுகிற திசையில் வாய்க்காலை வெட்டியது போல தமிழீழ விடுதலைப் போருக்கு ஆயுத வழியே சரியென்று பலபக்கத்தாலும் மூளைச்சலவை செய்யப்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகளை வைத்தே இலங்கையைச் சீரழித்ததை உணர முடிகின்றது;அதுதான் உண்மையும்கூட.தமிழீழ விடுதலை ஆயதப் போராட்டம் புலிகளின் பெயரால் இந்தியாவால் நடத்தப்பட்டது அல்லது புலிகளைக் கொண்டு இந்தியாவல் நடத்தப்பட்டது என்றும் கூறலாம்.
இன்றைய அரசின் நடவடிக்கையும் இலங்கை ஜனாதிபதி திரு.அநுர குமார திஸநாயக்காவின் நுட்பமான நகர்வும் இந்தியாவுக்கு பெரும் ஐமிச்சத்தைக் கொடுத்துள்ளது.தமிழர்கள் ஜனாதிபதியை காலப்போக்கில் ஏற்றுக் கொண்டு விடுவார்களோ அது நடக்கக்கூடாது என்பதில் அடுத்து என்ன செய்யலாம் எனச் சிந்திக்கத் தொடங்கியுள்ளது இந்தியா.
ஜனாதிபதி அவர்கள் எல்லா நாடுகளுக்கும் இராஜதந்திர பயணங்களை மேற்கொள்வதைப் பார்த்து அவரை எடைபோட போட முடியாத நிலைக்கு வந்துள்ளது இந்தியா.
ஒரு நாடு என்பது அந்நாட்டு மக்களோடு இணைந்த ஒன்றாகும்.நாட்டை நிர்வகிப்பதற்கான அரசைத் தெரிவு செய்கின்ற மக்கள் தமக்கான தேவைகளை அரசு செய்ய வேண்டும் என எதிர்பார்ப்புடனேயே அரசைத் தெரிவு செய்கின்றனர்.
உலகம் நாடுகளாகி,மக்கள் படிப்படியாக வளர்ச்சியடைந்த போது,இனக் குழுமங்களில் தானாக உருவாகிய தலைவர்கள் காலப்போக்கில் மக்களால் தெரிவு செய்யப்படம் தலைவராக மாறினார்கள்.
ஒரு காலகட்டம் வரையும் ஒரு நாட்டினது செயல்பாடுகள் யாவும் அந்நாட்டின் உள்ளகச் செயல்பாட்டை மட்டுமே கொண்டதாக இருந்து வந்தது. தொடர் வளர்ச்சிநிலையில் ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் தொடர்பு கொண்டது.அத்தொடர்புகள் இன்னும் வளர்ந்து செல்கையில் நாடுகள் ஒவ்வொன்றும் இன்னொரு நாட்டின் விவகாரங்களில் தலையிடத் தொடங்கின.
உளவாளிகளை நியமித்து மற்றைய நாடுகளை கண்காணிக்கும் செயலுக்கு வழிவகுத்தது.
மேலே கூறப்பட்ட விடயங்களால் பல நாடுகளில் உள்ளநாட்டுக் கிளர்ச்சிகளும்,ஆட்சி மாற்றங்களும் முரண்பாடுகளும் தோன்றவே செய்தன. ஒரு நாட்டில் இன்னொரு நாட்டினது தலையீட்டினால் ஏற்படும் விளைவகள் அந்தந்த நாடுகளின் அரச பலத்தைப் பொறுத்ததாவிருக்கும்.
இதுவே காலப் போக்கில்இன முரண்பாடுகளைச் சில நாடுகள் தமக்குச் சாதகமாகப் பாவிக்கத் தொடங்கின.அது ஒரு சூழ்ச்சி,திட்டமிட்ட சதி.அத்தகு நிலையே இந்தியா இலங்கையை கையாள முயற்சிக்கின்றது.
ஒரு நாட்டினது தலைவனோ அமைச்சகர்களோ தமது நாட்டு மக்களின் வளமான வாழ்வுக்காக
உலக நாடுகள் எங்கும் சென்று உதவிகளைப் பெறுதல் பரஸ்பரம் பண்டமாற்றினை செய்து கொள்ளல் என்பது இயல்பான ஒன்று அதில் எந்த ஒரு நாட்டுக்கும் அறிவுரை சொல்லவோ கருத்துச் சொல்லவோ உரிமையில்லை.
இந்தியா,இலங்கை கொண்டுள்ள பல நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றது.இலங்கையில் ஏற்பட்ட இன முரண்பாடுகளுக்கு இந்தியாதான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.
இன்றைய ஜனாதிபதி எந்த நாட்டுக்குப் பேகிறார் என்பதையோ,இந்தெந்த நாடுகளுக்கு போவதை தாங்கள் விரும்பவில்லை சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறோம் என இந்தியா நினைக்கவும் சொல்லவும் அவர்களுக்கு உரிமையே இல்லை.
இதுவரையில் எந்தவொரு ஜனாதிபதிக்கும் கொடுக்காத ஒத்துழைப்பை இன்றைய ஜனாதிபதியான மான்புமிகு திரு.அநுரகுமார திஸநாயக்காவுக்கு தமிழர்கள் கொடுத்துவருவதை இந்தியாவால் ஜீரணிக்க முடியவில்லை.
சிங்களவர்களையும் தமிழர்களையும் இனவாதத்தின் மூலமும் இனக்கலவரங்களை ஆரம்பித்து அதன் மூலமும் முரண்பட வைத்து அது தொடர்ச்சியாக வளரவேண்டும் என்பதற்காக ஆயதப் போராட்டத்தை வளர்த்தும் தமிழர்களையும் அழித்து இலங்கையைச் சீரழித்ததும் இந்தியாதான் இந்தியாவேதான்.
![]()