இலங்கை

மனித உரிமை மீறல்களில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டும்;  ஜெனீவா கூட்டத் தொடரின் 37 ஆவது அமர்வில் சிறிதரன் 

இலங்கை குறித்து ஒரு நாட்டுக்கே உரிய விசேட அறிக்கையாளர் நியமிக்கப்பட வேண்டுமென ஐ.நா.வின் தீர்மானத்தில் இடம்பெறுவதை உறுதி செய்யும் அதேவேளை, இடைக்கால நீதி நடைமுறையின் ஒரு பகுதியாக, கடுமையான மனித உரிமை மீறல்களில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன் என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஜெனீவாவில் எடுத்துரைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக ஜெனீவாவுக்கு சென்றிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அங்கு நடைபெற்ற 37 ஆவது அமர்வில் கலந்துகொண்டு பேசுகையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர்;

சமாதான காலத்திலும் ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பைப் பற்றிய என் நீண்டகாலக் கவலைவை வெளிப்படுத்த விரும்புகிறேன். இத்தகைய பகுதிகளில் வாழும் மக்கள் இன்றும் மனித உரிமைகளை ஒடுக்கக்கூடிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கொடுங்கோண்மையான விதிகளுக்கு பலியாகி வருகின்றனர்.

தற்போது, செம்மணியில் உள்ள மனிதப் புதைகுழி குறித்து நடைபெற்று வந்த முக்கியமான நீதித்துறை விசாரணைக்கான அரசாங்க நிதி நிறுத்தப்பட்டுள்ளது. சாட்சிகளின் மீதான அச்சுறுத்தல், பத்திரிகையாளர்கள் கைது போன்றவை தொடர்ச்சியாக நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

2013 முதல், ஒரு சுயாதீனமான, பன்னாட்டுத் தனித்துவமான விசாரணை அமைப்பை நிறுவ வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். குறிப்பாக, 2009 மே மாத இறுதிக் கட்ட போரின்போது இடம்பெற்ற கொடூர குற்றச்செயல்களைப் பற்றிய சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் நிபுணத்துவமான விசாரணைகள் நடைபெறுவது அவசியம்.

எனவே, இலங்கை குறித்து ஒரு நாட்டுக்கே உரிய விசேட அறிக்கையாளர் நியமிக்கப்பட வேண்டுமென தீர்மானத்தில் இடம்பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், இடைக்கால நீதி நடைமுறையின் ஒரு பகுதியாக, கடுமையான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன்.

இந்நடவடிக்கைக்கு சீர்மை இருக்க வேண்டுமெனில், பொதுமக்கள் நீதிக்கான அணுகலை, இழப்பீட்டை, மேலும் விசாரணைகளில் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுதல் அவசியம். ஏனெனில், தமிழர் பகுதிகள் முழுமையாக இராணுவமயமாக்கப்பட்டுள்ளதால் மக்கள் அஞ்சுகின்றனர். அவர்கள் தங்களை இலங்கை அரசாங்கத்திடம் வெளிப்படுத்த அச்சப்படுகின்றனர்.

நானே கூட இலங்கை அரசாங்கத்தாலும், அதற்கு ஆதரவாக செயல்படும் இராணுவமல்லாத குழுக்களாலும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு, தாக்கப்பட்டு, கொடுமைப் படுத்தப்பட்டிருக்கிறேன்.

துரதிர்ஷ்டவசமாக, பல சாட்சிகள் மற்றும் உயிர் பிழைத்த குடும்பத்தினர் முதிர்ந்து வருகின்றனர், சிலர் உயிரிழந்து வருகின்றனர், சிலர் அச்சத்தில் வாழ்கின்றனர், மற்றவர்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். எனவே, இப்பிரச்சினை மிகுந்த அவசரத்தன்மையுடையது. உடனடியான நீதி மற்றும் நடவடிக்கையை ஐ.நா.மனித உரிமைகள் பேரவை எடுக்க வேண்டுமென தமிழ் மக்கள் காத்திருக்கின்றனர் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *