இலங்கையின் நீதிமன்ற நடவடிக்கையில் வெளிநாடுகள் தலையிடக்கூடாது… ஏலையா க.முருகதாசன்

அண்மை நாட்களில் கைதான முன்னாள் ஜனாதிபதி திரு.ரணில் விக்கிரமசிங்கா கைதானதையடுத்து அவரை விடுதலை செய்ய வேண்டும் என திரு.எரிக் சொல்கைம் இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டதாக ஒரு இணையத்தளம் செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.
இந்தச் செய்தி உண்மையா பொய்யா என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.
தமிழ்மொழிச் செய்தி இணையத்தளங்கள் தாம் வெளியிடும் செய்திகள் சார்ந்த சம்பவங்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்களாயின் அவ்வாறு அவர்கள் தொடர்பு கொண்ட
நபர் அல்லது சம்பவங்கள் போன்றவற்றை ஆதாரங்களுடனேதான் செய்தியாகப் பிரசுரிக்க வேண்டும்.
தாம் வெளியிடும் செய்தி வெளிநாடுகளைச் சார்ந்ததாயினும் வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டவர்கள் கூறிய கருத்துக்களாயின்,அக்கருத்துக்கள் எந்த வெளிநாட்டு ஊடகங்களில் வெளி வந்ததோ அதனை மேற்கோள்காட்டி பிரசுரிக்க வேண்டும்,இயலுமாயின் அதன் பிரதியையும் செய்தியோடு சேர்த்து பிரசுரிப்பது சாலச் சிறந்ததாகும்.
அந்த வகையில் திரு.எரிக் சொல்கைம் சொல்லிய வார்த்தைகள் உண்மையாயின் இலங்கையின் நீதித்துறையைக் கேள்விக்குள்ளாக்கும் தலையீட்டினை வெளிப்படுத்துவதாக அமைகின்றது. அல்லது தவறான விளக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இச்செய்தி புனையப்பட்டதா எனவும் யோசிக்க வேண்டியுள்ளது.
அந்தந்த நாட்களில் நடக்கின்ற பரபரப்பான சம்பவங்களின் தாற்பரியம் கொண்ட சம்பவங்களை அடியொற்றி வெளிப்படுத்தும் மக்களின் அறியாவல் உணர்வுக்கு தீனி போடும் நோக்கில் செய்திகளை வெளியிடுதல் சமூகத்தின் மத்தியில் மிக மோசமான பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும் என்பதை செய்தி சம்பந்தப்பட்ட அந்த இணையத்தளம் உணர வேண்டும்.
இலங்கையின் நீதித்துறை இலங்கை மக்களுடையதே தவிர வெளிநாட்டவர் எவருக்கும் அது வளைந்து கொடுக்க வேண்டிய தேவையேயில்லை.

திரு.எரிக் சொல்கைம் அவர்கள் அப்படிச் சொல்வதற்கான எந்த அவசியமும் இல்லையென்பதே இலங்கையர்களின் கருத்தாகும்.
இலங்கையின் இன்றைய அவல நிலைக்கு தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிட்டது போல தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் தலையை ஆட்டி இலங்கை அரசிற்கு கண்ணைச் சிமிட்டிய இவரும் ஒரு காரணமாவார்.
ஒரு ஊழல்வாதிக்கு எதிராக இலங்கையின் ஊழலுக்கெதிரானதும்,அதற்கான நீதி வழங்கலுக்கு எதிரானதுமான நடவடிக்கைகளுக்கு எவரெல்லாம் சார்பானவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் மட்டுமல்ல மோசடியாளர்கள்,குற்றம் செய்பவர்கள் என்றே கணக்கிடப்படும்,கணிக்கப்படும்.
![]()