இலங்கை

தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை பொருளாளர் பதவி விலகல்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் தி.பரஞ்சோதி கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருக்கு  எழுத்து மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர், முன்னாள் மாவட்டத் தலைவர், நானாட்டான் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் என்ற வகையில் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாவட்டத் தலைமை கடந்த தேர்தலில் தன்னிச்சையாகச் செயற் பட்டதுடன், உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் அலட்சியமாகச் செயற்பட்டமை, கட்சிக்கும் மன்னார் மாவட்டத்திற்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தற்போதைய மாவட்ட தலைமையுடன் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மக்கள் மத்தியில் பல்வேறு வகையான விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் எழுந்துள்ளதால், தோல்வி மற்றும் பின்னடைவுக்கு தார்மீக பொறுப்பேற்று, பொருளாளர் பதவியில் இருந்து விலகுகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதி இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தலைவர், செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் தலைவராக செயல்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இவ்விடயம் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதனை தொடர்புகொண்டு வினவிய போது தான் மாவட்ட கிளை தலைமை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ளதாக எமது செய்தி செய்தியாளர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *