இலங்கை

நாமல் எனது சிறந்த நண்பர்.. ஆனாலும் தமிழர்களின் படுகொலைக்கு மகிந்த பொறுப்பு கூற வேண்டும்!! 

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதில் சொல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த ஐநா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது செம்மணியில் மக்களை சந்திக்கவிடாமல் தடுக்க அரசாங்கம் நிகழ்ச்சி நிரல் ஒன்றை செய்திருந்தது.

எனினும், அதையும் தாண்டி மக்கள் அவரை சந்தித்திருக்கின்றார்கள். செம்மணியில் இருந்து நேற்று ஆறு வயது குழந்தையில் எலும்புக் கூடு ஒன்றை யுனிசெப் நிறுவனத்தின் பை ஒன்றுடன் நேற்று மீட்டிருந்தனர்.

ஆறு வயது, மூன்று மாத குழந்தைகளை அங்கு புதைத்திருக்கின்றனர். தற்போது வரை அங்கு 33 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில், பட்டலந்த அறிக்கை தொடர்பில் விசாரணை செய்ய முடியுமாக இருந்தால், பட்டலந்த விடயம் தொடர்பில் யாரையேனும் சிறையில் அடைக்க முடியுமாக இருந்தால் ஏன் செம்மணி குறித்து விசாரணை செய்ய முடியாது.

நான் போர் வீரர்களை மதிக்கின்றேன். ஆனால் ஆயுதம் ஏந்திய அனைவரும் போர் வீரர்கள் அல்ல

இலங்கை வந்திருந்த ஐநா மனித உரிமைகள் ஆணையருடன் சிறிதரன் எம்.பி மட்டுமே பேச முடியும் என அரசாங்கத்தின் அமைச்சராக பிமல் ரத்நாயக்க கூறினார். ஆனாலும் நான் மனித உரிமைகள் ஆணையருடன் கதைத்திருந்தேன்.

பின்னர் செம்மணிக்கு அழைத்துச் சென்ற போது மனித உரிமைகள் ஆணையரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன. எனினும், தான் ஆணையாளருடன் கதைத்து செம்மணியில் மக்களை சந்திக்கச் செய்தேன்.

அன்றைய தினம் அரசாங்கத்தின் அமைச்சர் சந்திரசேகரன் காலில் செறுப்பு இல்லாமல் ஓடினார். அவருடைய செறுப்பு என்னுடைய காரில் தன் தற்போதும் இருக்கின்றது. அதை அவர் வந்து எடுத்துச் செல்லலாம்.

இராமநாதன் அர்ச்சுனாவை தமிழ் மக்கள் அடித்து விரட்டுவார்கள் என்று அமைச்சர் சந்திரசேகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஆகியோர் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தனர்.

ஆனால், இன்று அதே தமிழ் மக்கள் காலில் செறுப்பு இல்லாமல் அவர்களை விரட்டியடித்துள்ளனர். எங்களின் வலிகளை புரிந்துகொள்ளுங்கள் என்ற தான் தமிழ் மக்கள் கோருகின்றார்களே தவிர நாடு இரண்டாக பிளவடைய வேண்டும் என்று அவர்கள் ஒருபோதும் நினைக்கவில்லை.

போர் வீரர்களில் 98 வீதம் பேர் குற்றம் செய்யவில்லை. ஆனால் இரண்டு வீதம் பேர் குற்றம் செய்துள்ளனர். அந்த இரண்டு வீதமானவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று கோருகின்றோம்.

நானும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் சிறந்த அரசியல் நண்பர்கள். அவரை கண்டால் கதைக்காமல் செல்ல முடியாது. ஆனால் அவரின் தந்தை மகிந்த ராஜபக்ச தமிழர்களின் படுகொலைக்கு பதில்சொல்ல வேண்டும்.

செம்மணியில் இருந்து 33 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அங்கு உண்மையில் மக்கள் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். அதற்கு நானும் சாட்சி, எனது தந்தையும் அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை, சோதனை செய்யமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் இருந்தது என்னவென்று பட்டியல் ஒன்றையே என்னால் தரமுடியும். 15 ஆண்டுகாக வெளிவராமல் இருந்து தமிழ் மக்களின் தங்கம் எங்கிருந்து வந்தது.

அவை அனைத்து வேறு ஒரு நாட்டில் இருந்தே கொண்டுவரப்பட்டுள்ளது. அது குறித்த அனைத்து தகவல்களும் என்னால் வழங்க முடியும். ஆனாலும் எனக்கு பயமாக இருக்கின்றது. நான் மரணத்திற்கு ஒருபோதும் பயப்படவில்லை.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button