Uncategorizedஇலங்கை

ராஜபக்‌ஷக்கள் மீது விரைவில் விசாரணை

ராஜபக்‌ஷ குடும்பத்தினரால் அவர்களின் ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்திற்கு இழக்கச் செய்த நிதிகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முத்திரைக் கட்டணங்கள் மற்றும் இறக்குமதி, ஏற்றுமதி தொடர்பான கட்டுப்பாட்டுச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் ஊழல் எதிர்ப்பு அலுவலகத்திற்கு அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஆணைக்குழுவொன்றால் வித்தியாசமான பெயரொன்றும் முன்வைக்கப்பட்டது. அந்த குழுவுக்கு முன்னால் ஆனந்த விஜேபாலவும் எமது கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் அழைக்கப்பட்டிருந்தனர். குடியுரிமையை இல்லாமல் செய்வதே அது தொடர்பான நடவடிக்கையில் இருந்து. ஆனால் சட்டவிரோத ஆணைக்குழுவென அறிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அந்த ஆணைக்குழு செயலிழக்கச் செய்யப்பட்டது. இந்நிலையில் ஊழல் எதிர்ப்பு அலுவலகத்தால் செய்யப்பட்ட விசாரணைகளின் மூலம் ராஜபக்‌ஷ குடும்பத்தினரால் திறைசேரிக்கு இல்லாமல் செய்யப்பட்ட நிதி தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

அதாவது சீஎஸ்என் அலைவரிசை ஊடாக 152 மில்லியன் ரூபா திறைசேரிக்கு இல்லாமல் செய்யப்பட்டது. கோதாபய ராஜபக்‌ஷ தாய், தந்தையின் நினைவிடத்தை அமைத்து நகர அபிவிருத்தி நிதியத்திற்கு 35 மில்லியன் ரூபாவை இல்லாமல் செய்துள்ளனர். அத்துடன் மல்வானை வீட்டின் மூலம் 208 மில்லியன் ரூபா இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை சிராந்தி ராஜபக்‌ஷவினால் சிரிலியசவிய என்ற பெயரில் போலித் தகவல்களை வழங்கி வங்கிக் கணக்கை முன்னெடுத்துச் சென்றுள்ளனர். இப்போது அந்தக் கணக்கு போலியானது என்று தெரியவந்துள்ளது. இப்போது அது தொடர்பான ஆவணங்கள் வங்கியில் காணாமல் போயுள்ளது. அதனை யார் செய்தது என்று தேடிப்பார்க்கின்றோம். 43 மில்லியன் ரூபா கணக்கில் இருந்துள்ள நிலையில், அது தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. அந்த கணக்கின் தலைவராக சிராந்தி ராஜபக்‌ஷவே இருந்துள்ளார். இந்த கணக்கு தொடர்பில் நிதி குற்றவியல் பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் இவை தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும். இதனால் எங்கேயோ போகும் பாம்மை பிடித்து மடியில் போட்டுக்கொண்டு கடிக்கின்றது என்று சத்தமிட வேண்டாம். நாங்கள் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *