வாகரை பிரதேச சபையை பிள்ளையான் கட்சி கைப்பற்ற உதவிய கறுப்பு ஆடு யார்?

மட்டக்களப்பு, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தெரிவு செய்யப் பட்டு ஆட்சியை கைப்பற்றியதுடன் அதற்கு தேவையான ஒரு வாக்கை தமிழரசு கட்சி உறுப்பினரா? அல்லது சிறிலங்கா முஸ்லீம் காங்கரஸ் கட்சி உறுப்பினரா ? ஆதரவு வழங்கிய கறுப்பு ஆடு ? என அரசியல் கட்சிகளுக்குள்ளே கறுப்பாடு தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
வாகரை பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர்களை தெரிவு செய்யும் அமர்வு வெள்ளிக்கிழமை (20) பிரதேச சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்த பல்கோஸ் மோகனராசா மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதனையடுத்து தவிசாளர் தெரிவு செய்ய உள்ளூராட்சி ஆணையாளர் கோரியபோது திறந்த வாக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழரசு கட்சி 6 உறுப்பினர்களும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் 2 பேர் உட்பட 8 உறுப்பினர்கள் திறந்த வாக்கெடுப்புக்கு வாக்களித்ததுடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 7 உறுப்பினர்களும் தேசிய மக்கள் கட்சி 3 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சத்தி ஒரு உறுப்பினர் உட்பட 11 உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்புக்கு வாக்களித்தனர்.
இதனை தொடர்ந்து தவிசாளரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது இதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் 12 வாக்குகளை பெற்றதுடக் இலங்கை தமிழரசு கட்சி பல்கோஸ் மோகனராசா 7 வாக்குகளை பெற்றதையடுத்து கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இதனையடுத்து பிரதித் தவிசாளருக்கு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சண்முகநாதன் ரசிகரன் ஐக்கிய மக்கள் சத்திய சேர்ந்த கட்சியைச் சேர்ந்த மொஹமட் புகாரி மொஹமெட் ஹைதர் போட்டியிட்டனர் இதில் சன்முகநாதன் ரசிகரனுக்கு 10 வாக்குகளும். மொஹமெட் ஹைதருக்கு ஆதரவாக 8 வாக்குகளும் கிடைத்ததுடன் ஒரு உறுப்பினர் வாக்களிப்பதை நிராகரித்த நிலையில் தமிழரசு கட்சி சண்முகநாதன் ரசிகரன் பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தவிசாளராக போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினருக்கு 7 பேருடன் தேசிய மக்கள் கட்சி 3 உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சத்தி உறுப்பினர் ஒருவர் உட்பட 11 பேர் ஆதரவு வழங்கியுள்ள நிலையில் அவர் 12 வாக்குகளை பெற்றுள்ளார். எனவே மேலதிகமாக அந்த ஒரு வாக்கை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆதரவாக தமிழரசு கட்சி உறுப்பினரா? அல்லது சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினரா? வாக்களித்தார். இதனால் யார் அந்த கறுப்பு ஆடு, எந்த கட்சி உறுப்பினர் ? என்பது அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் குழப்பகரமாக உள்ளது.
![]()