மெல்பேர்ணில் அக்கினிக்குஞ்சு வாழ் நாள் சாதனையாளர் விருது விழா! … ஐங்கரன் விக்கினேஸ்வரா.

மெல்பேர்ணில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை (25/5/2025) இசையருவி பாடல் போட்டியும், அக்கினிக்குஞ்சு இணையதளத்தின் பதினைந்தாவது ஆண்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றன.
அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பதினைந்தாவது ஆண்டு விழாவில் இசையருவி பாடல் போட்டி,உள்ளூர் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களை கௌரவித்தல், இசையருவி இசை நிகழ்ச்சியுடன் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

கடந்த பதினைந்து வருடங்களாக அக்கினிக்குஞ்சு மின்னிதழாக தொடர்நது வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ் வருடம் மெல்பேர்ணில் நடைபெற்ற நிகழ்வில் பல இலக்கிய அறிஞர்களுக்கும் , இசை கலைஞர்களுக்கும் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் எஸ்.பொ நினைவு விருதை மூத்த எழுத்தாளர் லெ முருகபூபதியும், கவிஞர் அம்பி நினைவு விருதை மகாதேவ ஐயர் ஜெயராயசர்மா அவர்களும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்திரேலியாவில் தமிழ் இலக்கியத்திற்கான வாழ் நாள் சாதனையாளர் விருதினை எழுத்தாளர் கிறிஸ்டி நல்லரெத்தினம், எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வரா, சட்டத்தரணி சந்திரிகா சுப்ரமணியம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அத்துடன் வானொலி ஒலிபரப்புப் பணிக்காக எட்வேட் அருள்நேசதாசன், ரமேஷ் பாலகிருஷ்ணர் ஆகியோர் வாழ் நாள் சாதனையாளர் விருதினை பெற்றுக் கொண்டனர்.
மேலும் இசைப் பணிக்காக ரொகான் அலோசியஸ், ரவீந்திரன் சதீஸ்குமார், இரமா சிவராஜா, சுமதி சத்தியமூர்த்தி ஆகியோர் வாழ் நாள் சாதனையாளர் விருதினை பெற்றுக் கொண்டனர்.
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன், அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன், வெந்து தணிந்தது காடு, தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? என முழங்கிய மகாகவி பாரதியாரின் சொல்லின் வீரியத்தை அவுஸ்திரேலிய மண்ணில் கடந்த பதினைந்து வருடங்களாக ‘அக்கினிக் குஞ்சு’ இணைய தளத்தை செவ்வனே நடாத்தி வரும் யாழ் பாஷ்கரின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அக்கினிக்குஞ்சு 1990 களில் அவுஸ்திரேலியாவில் இருந்து மாதாந்தம் அச்சில் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியராக யாழ் பாஸ்கர் நீண்ட காலமாக செயற்பட்டு வந்தார். புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் கலாச்சார சஞ்சிகை என அறிவித்து அனைத்து வகையான படைப்புக்களையும் தாங்கி வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.



![]()