பலதும் பத்தும்

பொலிஸாரை தாக்கி கைதான பூனை, ஜாமீனில் சென்ற வினோதம்; தாய்லாந்தில் சம்பவம்!

தாய்லாந்தில் பொலிஸாரை தாக்கிய பூனை கைது செய்யப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டின் பாங்காக் பகுதியில் ஒருவர் ஷார்ஹேர் வகை பூனை ஒன்றை நுப் டாங் என பெயரிட்டு ஆசையாக வளர்த்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் இந்த பூனை காணாமல் போனது. அதை தேடியலைந்த உரிமையாளர் இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

ஜாமீனில் அனுப்பிய பொலிஸார்

காணாமல் போன பூனை நுப் டாங் பல இடங்களில் பயணித்து பூங்கா ஒன்றில் இருந்துள்ளது. பார்க்கவே அழகாக இருக்கும் அந்த பூனை ஆதரவின்றி இருந்ததை கண்ட அப்பகுதி பொலிஸார் அதை தூக்க சென்றபோது அது அவர்களை நகத்தால் பிறாண்டி தாக்கியுள்ளது.

இதனால் நுப் டாங் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அதை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதியாக பூனை இருக்கும் போட்டோவை சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டு பூனை உரிமையாளர் தங்களை தொடர்பு கொள்ள வேண்டுமென தெரிவித்திருந்தனர்.

க்யூட்டான நுப் டாங்கை பார்த்த சிலர் அதன் ஓனர் வராவிட்டாலும் தாங்களே அதை தத்தெடுத்துக் கொள்வதாக பொலிஸாரிடம் கெஞ்சினர். ஆனால் பொலிஸ் அதற்கு மறுத்து விட்டனர்.

இந்நிலையில் நுப் டாங் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள விஷயம் அதன் உரிமையாளருக்கு தெரிய வந்து அவர் அங்கு சென்றபோது, அவரிடமும், பூனையிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டு நுப் டாங்கை ஜாமீனில் பொலிஸார் அனுப்பியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button