கவிதைகள்
“ஆண்டுவிழா நாளில் அனைவரும் வாழ்த்துவோம்” … கவிதை … மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

பதினைந்தாம் ஆண்டில் அக்கினிக் குஞ்சு
பலருமே வியக்க தலைநிமிர்ந்து நிற்கிறது
படைப்பவர் பலரையும் பக்குவமாய் அணைத்து
பட்டொளி பரப்பி நிற்கிறதே இன்று
யாழிருந்து வந்தாரே நல்ல தமிழ்பாஸ்கர்
நல்லிதயம் பலபேரை இணைத்தாரே பாஸ்கர்
எழுத்துலக இமயம் எஸ்பொவைக் கண்டார்
எல்லோரும் விரும்பிடவே மலர்ந்ததே நற்சஞ்சிகை
அச்சிலே வந்தது அனைவரும் ரசித்தார்
காலத்தின் மாற்றம் கணணிவழி மாறியது
கணணியில் வந்தும் கருத்துரைத்து நிற்கிறது
அக்கினிக் குஞ்சி அருமையாம் இதழும்
ஆளுமைகள் பலருக்கு அருமையாய் விருதை
ஆண்டு விழாவில் அளித்துமே நிற்கிறது
தகுதிக்கு ஏற்ப விருதளித்து யாவரையும்
தட்டிக் கொடுக்கும் பாங்கினை வாழ்த்திடுவோம்
இன்னிசை விருந்தளிக்க இந்தியப் பாடகரை
இங்களைத்து எங்களையே இசைமூழ்க வைக்கிறது
இங்கிருக்கும் பாடகரை இனங்கண் டிணைத்து
இங்கிதமாய் பரிசளித்து இனிப்பாக்கி நிற்கிறது
ஆண்டுவிழா நாளில் அனைவரும் வாழ்த்துவோம்
அக்கினிக் குஞ்சு ஆண்டுபல வளர்க
தமிழுலகில் என்றும் தலைநிமிர்ந்து நிற்க
உளமார நானும் வாழ்த்தி மகிழ்கின்றேன்.
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …அவுஸ்திரேலியா
![]()