ஐ.எம்.எப்.பிலிருந்து இலங்கை விலகுமா?; ரணில் தெரிவித்ததாக தகவல்

சர்வதேச நாணய நிதியம் இலங்கையில் இருந்து விலகும் அபாயம் இருப்பதாகவும் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் ஆபத்தில் உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டண சரி செய்தல் திட்டம் மார்ச் 31 ஆம் திகதிக்குள் இறுதி செய்யப்பட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்திருந்தாலும், அந்த திட்டத்தை செயல்படுத்தத் தவறியது சிக்கலானது என்று முன்னாள் ஜனாதிபதி கூறினார்.
நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் ஐந்தாவது தவணையான 344 மில்லியன் அ.டொலர் ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் சர்வதேச நாணய நிதியம் சமர்ப்பித்த திட்டங்களை செயல்படுத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவது அந்தத் தொகையை வழங்குவதை மேலும் தாமதப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
மின்சார திருத்த கட்டணம் இன்னும் சமர்ப்பிக்கப்படாததால், 344 மில்லியன் டொலர்களைப் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவிடம் ஒப்புதல் பெறுவதற்கு நேரம் எடுக்கும் என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறினார்.
இந்தப் பிரச்சினைகள் காரணமாக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் ஆபத்தில் உள்ளது என்றும் அவர் கூறினார்.
தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ, சமீபத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தும் போது, ஜூன் மாதத்திற்குள் மின்சார கட்டண அனுமானங்களில் உள்ள சில சிக்கல்கள் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் பொருத்தமான முறையில் முன்னேறுவது குறித்து சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()