இலங்கை

நாடெங்கும் துப்பாக்கிச் சூடு; சஜித் பிரேமதாச விசனம்

நாட்டு மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கும், தமது அன்றாட வாழ்க்கையை பாதுகாப்பான முறையில் கழிக்கவும் ஏற்ற சூழலை உருவாக்கித் தர வேண்டியது நாட்டை ஆளும் அரசாங்கத்தினது கடமையாகும். தற்போதைய அரசாங்கத்திற்கு இரு தேர்தல்களிலும் பெரும் மக்கள் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. முறைமையில் மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்தனர். இன்று நாட்டில் பயங்கரமான சூழ்நிலை உருவாகி, கொலைக் கலாசாரம் தலைதூக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புளத்சிங்கள பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் பேசுகையில்,

இந்த வருடம் ஆரம்ப காலப்பகுதிக்குள் மட்டும் அதிக அளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அச்சமின்றி வீடுகளுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தும் நிலை இன்று காணப்படுகின்றன. வீதிகளில் சுதந்திரமாக நடமாடக்கூட முடியாத நிலையை நாடு எட்டியுள்ளது. வர்த்தகர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என சகலருக்கும் துப்பாக்கிச் சூடு நடத்தும் நிலைக்கு நாடு தற்போது வந்துள்ளது.

இது தொடர்பில் பாராளுமன்ற சபை அமர்வுகளிலும் வெளியிலும் கேள்வியெழுப்பினால், இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அல்ல என அரசாங்கம் தெரிவித்து வருகிறது. நாட்டில் கொலைக் கலாசாரம் தலைதூக்கி வருகின்ற நிலையில், அதனை தடுக்க முடியாமல் அரசாங்கம் மௌனம் காத்து இருக்கும் போது, தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பில்லை என எவ்வாறு கூறுவது என்பதில் பிரச்சினை காணப்படுகின்றன. இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அங்கத்தவர்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பில் டியுஷன் வகுப்புகளை நடத்துவதற்கு கூட முயற்சித்தனர். ஆன போதிலும் தற்போதைய ஆட்சியாளர்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பில் டியுஷன் போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சட்டத்தை விட தற்போது தோட்டா, வாள், கத்தி, வெடிகுண்டு என்பன வென்றுள்ளன.

இவ்வாறு ஒரு நாட்டை நடத்த முடியாது. சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினையை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவும் வேண்டும். குழந்தைகள், பெண்கள், தாய்மார்கள் என குடிமக்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை. அச்சத்தோடு தமது நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு இன்று குடிமக்கள் தள்ளப்பட்டுள்எனர். தினந்தோறும் அச்சத்தோடு பொழுதை கழித்து விட முடியாது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதிமன்றங்களுக்குள்ளும் கொலைகள் இடம்பெற்று வரும் நாட்டில் நாம் வாழ்ந்து வருகிறோம். இந்த சம்பவத்துடன் தொடர்பான சந்தேக நபர்களை அரசாங்கத்தினால் இன்னும் கூட கண்டுபிடிக்க முடியாதுபோயுள்ளது. நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கை சரியான முறையில் பேண வேண்டும். அரசாங்கம் இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இதனை சாதாரணமாக கடந்து விடமுடியாது. இந்த போக்கு சரியான போக்கல்ல. மறுபுறம் மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையில் இருந்து இப்போது விலகிச் செல்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *