இலங்கை

தமிழ்த் தேசிய அரசியலை வியாபாரப் பண்டமாக்கி மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தமிழ் அரசியற் கட்சிகள்; ஐங்கரநேசன் காட்டம்..!

தமிழ்த் தேசிய அரசியலை வியாபாரப் பண்டமாக்கி மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தமிழ் அரசியற் கட்சிகளையும் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வலி வடக்கு பிரதேசசபைக்கு சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியப் பேரவையின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் நேற்றையதினம்(16) மல்லாகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜனாதிபதித் தேர்தலின்போதும் பாராளுமன்றத் தேர்தலின்போதும் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களில் கணிசமானோர் ஜே.வி.பி என்னும் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருக்கிறார்கள், தமிழ்த் தேசிய அரசியற் பயணத்தில் ஒரு பின்னடைவாக வடக்கு கிழக்கில் ஜே.வி.பி காலூன்றியமைக்கு எமது வாக்காளர்களைக் குற்றம் சாட்டுவது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல.

எங்கள் கைவிரல்களாலேயே எங்கள் கண்களைக் குத்துவது போன்று தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளே தென்னிலங்கைப் பேரினவாதக் கட்சிகளுக்குத் தமிழ் மக்களை வாக்களிக்கப் பழக்கினார்கள்.

முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுறுத்தப்பட்டவுடன் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் வரலாற்றுப் பிழையான முடிவை எடுத்தார்.

முள்ளிவாய்க்கால்வரை யுத்தத்தை முன்னின்று நடாத்திய சரத் பொன்சேகாவுக்கு தமிழ் மக்களை அவர் வாக்களிக்க வைத்தார். இதன் மூலம் போர்க்குற்றவாளி என்ற குற்றச்சாட்டிலிருந்து நாமே அவரை விடுதலை செய்தோம். இதன் விளைவாகவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எப்போதுமே எதிரான நிலைப்பாடுகளை எடுத்து வந்த ஜே.வி.பிக்கு இன்று தமிழ் மக்கள் வாக்களிக்கத் தலைப்பட்டுள்ளார்கள்.

எம் மத்தியிலுள்ள பல தமிழ்க் கட்சிகள் உதட்டளவில் தமிழ்த் தேசியம் பேசுவனவாகவும் மனதளவில் பேரினவாதக் கட்சிகளை விசுவாசிப்பனவாகவுமே உள்ளன. மதுபான விற்பனை அனுமதிப் பத்திரங்களை இலஞ்சமாகப் பெற்றும், பன்னாட்டு நிறுவனங்களிடம் பல கோடிகளைப் பெற்றும், மத்திய அரசின் பாதீடுகளை ஆதரித்தும் தமிழ்த் தேசிய விரோத நிலைப்பாடுகளை எடுப்பதற்கு இக்கட்சிகள் ஒருபோதும் தயங்கியதில்லை. தமிழ் மக்கள் இத்தேர்தலில் தென்னிலங்கைக் கட்சிகளோடு இப்போலித் தமிழ்த்தேசியக் கட்சிகளையும் சேர்த்தே நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *