உலகம்

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 32 பேர் பலி

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்கு புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த போரில் காசா முனையில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 59 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் நோக்கிலும் காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. காசா முனையில் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.இந்நிலையில், காசா முனையில் இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 32 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். வடக்கு காசா, டெர் எல் பலா, கான் யூனிஸ் உள்ளிட்ட பகுதிகளும் இஸ்ரேல் படை வான்வழி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, ரபா மற்றும் கான் யூனிஸ் பகுதியில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புப்படை அப்பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *