இலங்கை

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பாதுகாக்க அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? – ரவி கேள்வி

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையில் எவ்வித சிக்கலும் ஏற்படக் கூடாதெனில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதனை எவ்வாறு கையாளப் போகின்றனர் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆடை மற்றும் இறப்பர் உற்பத்திகள் இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு சுமார் 3.5 பில்லியன் டொலருக்கான ஏற்றுமதிகள் இடம்பெறுகின்றன.

ஆனால் அங்கிருந்து 600 மில்லியன் டொலர் அளவிலேயே ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கமைய எமக்கு பாரிய இலாபம் காணப்படுகிறது.

இவ்வாறான ஏற்றுமதிகளைக் கொண்ட நாடுகள் தொடர்பிலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய வரி கொள்கைகளை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளார்.

அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

கடன் மீள் செலுத்தல் மற்றும் ஏற்றுமதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.அதேவேளை வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்க்க வேண்டும்.

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஓய்வூதியத்தை நீக்குவதை விடுத்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள்ள சிறப்பு சலுகைகளை நீக்குவதே பொறுத்தமானது.

எமது ஆட்சியில் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை மீண்டும் பெற்றுக் கொள்ளப்பட்டது. அதில் மீண்டும் எவ்வித சிக்கல்களும் ஏற்படக் கூடாது எனில், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்ததாக ஐரோப்பிய நாடுகளுக்கே இலங்கையிலிருந்து அதிகளவில் ஏற்றுமதிகள் இடம்பெறுகின்றன.

எனவே இது தொடர்பில் வெற்றி கொண்ட சிறந்த சந்தர்ப்பத்தை எக்காரணத்துக்காகவும் இழந்து விடக் கூடாது. என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *