குருந்தூர் மலையில் ஆராய்ச்சிக்குத் தடை!

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை குருந்தூர் மலையில் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் பிரச்சினைகளுக்குரிய விடயங்களை ஆராய்வதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என
புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
வடக்கு மாகாணத்தில் மதத் தலங்கள், விகாரைகள் மற்றும் தொல்பொருள் சின்னங்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.இந்தப் பிரச்சினைகள் இன்று,நேற்று தோற்றம் பெற்றதல்ல-பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்த பிரச்சினைகள் தோற்றம் பெற்றன.
வலிகாமம் – வடக்கு பகுதியில் 3 திஸ்ஸ விகாரைகள் காணப்படுகின்றன. இதில் தையிட்டி திஸ்ஸ விகாரை காணியை அடிப்படையாகக் கொண்டு பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. வடக்கில் காணப்படும் இவ்வாறான பிரச்சினைக்கு நல்லிணக்கத்துடனும் பொறுமையுடனும் தீர்வு காண வேண்டியது அவசியம்.
முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை குருந்தூர் மலையில் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரச்சினைகளுக்குரிய விடயங்களை ஆராய்வதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வெடுக்குநாறி ஆலயம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் முன்வைத்த பரிந்துரைகளுக்கு முரணாக செயற்பட்டதால் தான் அப்பிரதேசத்தில் பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.
இந்து கோயில் அபிவிருத்திக்காக 36 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களை வெறுப்பு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஆகவே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது.
தொல்பொருள் திணைக்களத்தில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் . வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்ததாக தமிழர்கள் பணிபுரிகிறார்கள் .
தொல்பொருள் திணைக்களத்தில் நிலவும் ஆளணி பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படும். ஆட்சேர்ப்பின் போது தமிழ் மொழி பேசுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.ஜனாதிபதி தலைமையில் இன்று (நேற்று திங்கட்கிழமை ) காலை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்றார்.
![]()