இலங்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் 1960 உறுப்பினர்கள் ஜே.வி.பி.யால் கொல்லப்பட்டனர் – பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை கூறுவதாக வஜிர

ஐக்கிய தேசியக் கட்சியின் சுமார் 1960 உறுப்பினர்கள் ஜேவிபியால் கொல்லப்பட்டதாக பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையின் மூன்றாவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இன்று (17) கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த வஜிர அபேவர்தன,

ஜேவிபி அரசாங்க சொத்துக்களுக்கு ஏற்படுத்திய சேதம் அச்சத்தை உண்டாக்கும் அளவிற்கு பெரியது என்று ஆணைக்குழு அறிக்கை தெளிவாகக் கூறுகிறது.

1987ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டின் பாதுகாப்பு நிலைமை படிப்படியாகவும் தொடர்ச்சியாகவும் மோசமடைந்து, அரசியல்வாதிகளின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக ஆணைக்குழு அறிக்கை கூறுகிறது.” எனத் தெரிவித்தார்.

படலந்த ஆணைக்குழு அறிக்கையின் 29ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த வஜிர அபேவர்தன,

“உயர் மட்ட அரசியல்வாதிகளைத் தவிர, பொது மக்களிடையே அரசியல் அனுதாபிகளும் அச்சுறுத்தல்களுக்கு ஆளானதாக ஆணைய அறிக்கை கூறுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சுமார் 1960 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக ஆணையம் மதிப்பிடுகிறது .

அவர்களில் அடுத்தடுத்து இரண்டு ஐக்கிய தேசியக் கட்சி செயலாளர்களான ஹர்ஷ அபேவர்தன, நந்தலால் பெர்னாண்டோ மற்றும் சில ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்ததாக ஆணைக்குழு அறிக்கை தெளிவாகக் கூறுகிறது.

பட்டாலந்த ஆணைக்குழு அறிக்கை, மூத்த பொலிஸ் அதிகாரிகளும் தங்கள் தாக்குதல்களில் குறிவைக்கப்பட்டதாகவும், அந்த நேரத்தில் ஜேவிபியின் நடவடிக்கைகள் குறித்து புலனாய்வுத் தகவல்களைச் சேகரிப்பதில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கண்காணிப்பாளர் கிளாரன்ஸ் பெரேரா, ஜே.வி.பி.யினரால் கொல்லப்பட்டதாகவும் கூறுகிறது.” என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *