இலங்கை

மாதவனை மேய்ச்சல் தரைவிவகாரம் நீதிமன்றத்தீர்ப்பை அமுல்படுத்துங்கள்

இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாதவனை மேய்ச்சல் தரையில் சட்டவிரோதமான முறையில் குடியேறியுள்ளவர்கள் தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பினை அரசு செயற்படுத்த வேண்டும். அங்கு குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. ஞானமுத்து ஸ்ரீநேசன் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய
அவர் தொடர்ந்து பேசுகையில்,

முந்தெனியாற்று கருத்திட்டம் 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இன்று வரை நிறைவு படுத்தப்படவில்லை. வெளிநாட்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் இந்த கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டம் கைவிட்டுப் போகுமா என்ற சந்தேகம் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட விவசாயிகளின் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

உறுகாமம் – கித்துள் ஆகிய பகுதிகளை இணைத்து முந்தெனி யாற்று திட்டத்தை அமுல்படுத்துவதால் 12 சிறுகுளங்களுக்கும், 25000 ஹெக்டயார் விவசாய நிலங்களுக்கும் நீரை விநியோகிக்க முடியும்.அதேபோல் மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும். அத்துடன் கரடியனாறு விதை உற்பத்தி மையத்துக்கும் நீரை விநியோகிக்க முடியும்.

இதுவரை காலமும் வலதுசாரி கொள்கை உடையவர்கள் ஆட்சியில் இருந்தார்கள் .தற்போது இடதுசாரி கொள்கையுடையவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளார்கள் ஆகவே சமத்துவ அடிப்படையில் அபிவிருத்திகள் பகிரப்பட வேண்டும்.

அத்துடன் மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையில் எமது மக்கள் பல தசாப்தகாலமாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அண்மைகாலமாக அந்த பகுதியில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமான முறையில் குடியமர்த்தப்பட்டார்கள்.

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையில் சட்டவிரோதமான முறையில் குடியமர்த்தப்பட்டவர்களை உடனடியாக வெளியேற்றுமாறும், இந்த சட்டவிரோத செயற்பாடுகள் இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இருப்பினும் நீதிமன்றத்தின் தீர்ப்பு செயற்படுத்தப்படவில்லை.

எனவே இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாதவனை மேய்ச்சல் தரையில் சட்டவிரோதமான முறையில் குடியேறியுள்ளவர்கள் தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பினை அரசு செயற்படுத்த வேண்டும். அங்கு குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *