உலகம்

சர்வாதிகாரத்தின் உச்சம்!; வட கொரியாவிலிந்து தப்பியவரின் பகீர் தகவல்

உலக நாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டு தன்னந்தனியாக தனக்கென தனித்த சட்டதிட்டங்களுடன் சர்வாதிகார ஆட்சியின் கீழ் உள்ள நாடு வட கொரியா.

கடந்த நூற்றாண்டு தொட்டு ஒற்றைக் குடும்ப ஆட்சியின் கீழ் வட கொரியா இயங்கி வருகிறது. அதன் தற்போதைய ஜனாதிபதியாக கிட்டத்தட்ட மன்னராகவே கிம் ஜாங் உன் உள்ளார்.

வடகொரியாவின் மக்களின் வாழ்க்கை நிலை குறித்து வெளியுலகிற்கு இன்னும் புதிரானதாகவே இருந்து வருகிறது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் மக்கள் தங்கள் அன்றாட வாழ்நாளை கடத்தவே மிகவும் சிரமப்படுகின்றனர் என்பது தென் கொரியா மற்றும் பிற உலக நாடுகளின் கூற்று.

அத்தகு அடக்குமுறைகளிலிருந்து யாரும் வெளிநாடுகளுக்கு தப்பிக்க முயன்று பிடிபட்டால் சித்திரவதைக்கும் கடுமையான தண்டனைக்கும் உள்ளாவார்கள்.

1950களில் இருந்து குறைந்தது 30,000 வட கொரிய குடிமக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தப்பியோடியவர்களில் பெரும்பாலானவர்கள், தென் கொரியா, சீனா, ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் குடியேறினர்.

அவர்களில் ஒருவர் திமோதி சோ. இரண்டு முறை முயற்சித்த பிறகு திமோதி நாட்டை விட்டு தப்பிச் சென்று தற்போது இங்கிலாந்தில் மனித உரிமை ஆர்வலராகப் பணியாற்றுகிறார். வட கொரியாவில் மக்களின் வாழ்க்கை குறித்து சமீபத்தில் அவர், LADbible நிகழ்ச்சியில் பேசினார்.

அவர் கூறியதாவது, வட கொரியாவில் ஒருவர் டிவி வாங்கினால், ஒரு அரசு அதிகாரி அவரது வீட்டிற்கு வந்து, அரசு நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்கிறாரா என்று சரிபார்க்கிறார்.

வீட்டில் நிறுவப்பட்ட அனைத்து எண்டெனாக்களும் அகற்றப்பட்டு, ஒரே ஒரு எண்டெனாவுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதன் மூலம் கிம் ஜாங் உன்னின் பிரச்சாரத்தை மட்டுமே அரசாங்க சேனலில் காண முடியும். வேறு எந்த சேனலையும் யாராவது பார்க்க முயற்சித்தால், அவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

வட கொரியாவில் அரசாங்க பிரச்சாரம் தொடர்பான நிகழ்ச்சிகளை மட்டுமே குடிமக்கள் பார்க்க முடியும் என்ற கடுமையான விதி உள்ளது. வேறொரு நாட்டின் சேனல்கள் அல்லது நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை மறந்துவிடுங்கள், அவற்றைத் தேடுவது கூட குற்றமாகக் கருதப்படுகிறது.

இந்த விதியை யாராவது மீறினால், அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். சில சமயங்களில் அவர்கள் கடுமையான சித்திரவதைகளையும் சந்திக்க நேரிடும். வட கொரியாவில் மக்கள் தங்கள் விருப்பப்படி முடியை வெட்டக் கூட அனுமதிக்கப்படுவதில்லை.

பாடசாலை செல்லும் மாணவர்கள் மூன்று வகையான சிகை அலங்காரங்களில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அங்குள்ள முடி திருத்துபவர்கள் கூட வேறு எந்த வகையான சிகை அலங்காரத்தையும் வெட்டத் துணிவதில்லை.

அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஸ்டைலிலிருந்து வேறுபட்ட ஸ்டைலில் சிறுவர்கள் தலைமுடியை வெட்டினால், அவர்களது பெற்றோரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து வாக்குமூலம் பதிவுசெய்வார்கள்.

பல நேரங்களில் மக்கள் தங்கள் தலைமுடி காரணமாக கடுமையான சித்திரவதைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இத்தகைய விதிகள் காரணமாக, அங்குள்ள மக்கள் எப்போதும் அடக்குமுறை மற்றும் பயத்தின் சூழலில் வாழ்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தவுடன் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற காத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *