இலங்கை

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர தப்பியோட்டம் – கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணை

கிரிபத்கொட பகுதியில், அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்திற்கு போலி பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவைக் கைது செய்ய, களனியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றபோது, ​​அவர் தனது வீட்டை விட்டு தப்பியோடியதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு அதிகாரிகள் குழு ஒன்று பிரசன்ன ரணவீரவைக் கைது செய்யச் சென்றிருந்தது.

அந்த நேரத்தில் பிரசன்ன ரணவீரவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் இருந்ததாகவும், குற்றப் புலனாய்வுத் துறையினர் அவரது மனைவியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்ததாகவும், பின்னர் ரணவீரவின் சாரதியிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிக்கு போலியான பத்திரங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் களனி பிராந்திய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை இந்தக் குற்றச்சாட்டின் கீழ் முன்னதாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட ஏழு பேர் எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர, களனிய பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், சட்டத்தரணி ஒருவர் ஆகியோரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் தற்போது தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.

மிக விரைவில் மேற்குறித்த தரப்பினர் கைது செய்யப்படுவார்கள் என்றும் அறியக் கிடைத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *