உள்ளூராட்சிசபைத் தேர்தலில் எவ்வாறு போட்டி?; தமிழரசின் மன்னார் மாவட்ட கிளையுடன் ஆராய்வு

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடன் எவ்விதத்தில் இத்தேர்தலை அணுக முடியும் என்றும்,தேர்தலின் முன்னர் வெவ்வேறு அணிகளாக போட்டியிட்டாலும் ஆட்சி நிர்வாகங்களை அமைக்கின்ற போது சேர்ந்து அமைக்கக்கூடிய வகையில்,தேர்தலுக்கு முன்னர் ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சியின் சகல மாவட்டக் கிளைகளையும் சந்தித்து வரும் நிலையில் சுமந்திரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் மாவட்ட கிளையுடன் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்தார்.
கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
மன்னாரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் குறித்த கூட்டம் இடம் பெற்றது.கட்சியின் சகல அங்கத்தவர்களும் குறித்த கூட்டத்தில் பங்கு பற்றி இருந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகள் குறித்து ஆராய்ந்துள்ளதோடு,குறித்த சபைகளில் வேட்பாளர்களை நியமிப்பது குறித்தும் குறிப்பாக வட்டார வேட்பாளர்கள்,இரண்டாவது பட்டியல் வேட்பாளர்கள் நியமிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.ஏற்கனவே நியமிக்கப்பட்ட வேட்பாளர்களில் நாட்டில் இல்லாதவர்கள் மற்றும் வேறு கட்சியில் இணைந்தவர்கள் குறித்தும் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
எனினும் மிகவும் செல்வாக்கு உள்ளவர்களை வட்டார வேட்பாளராக நியமிப்பது என ஏற்கனவே கட்சி எடுத்த தீர்மானத்துடன் மன்னார் மாவட்ட கிளையும் இணங்கியுள்ளது .
ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடனும் எவ்விதத்தில் இத்தேர்தலை அணுக முடியும் என்றும்,தேர்தலின் போது வெவ்வேறு அணிகளாக போட்டியிட்டாலும்,ஆட்சி நிர்வாகங்களை அமைக்கின்ற போது சேர்ந்து அமைக்கக்கூடிய வகையில்,தேர்தலுக்கு முன்னர் ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளோம்.மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சபைகளுக்கும் ஏற்ற வகையில் தீர்மானங்கள் எடுக்கப்படும்.அனைவரினதும் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டுள்ளன என்றார்.
![]()