தமிழ் கட்சிகளுடன் தமிழரசு கூட்டில்லை; தேர்தலுக்குப் பின் கூட்டாக ஆட்சி

நாங்கள் ஒருபோதும் நாட்டின் ஆட்சியை பிடிக்கவோ அல்லது ஜனாதிபதியாவதற்கோ முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால், எங்களுடைய ஊரில் இருக்கும் அதிகாரங்களை நாங்கள் மற்றவர்களுக்கு தாரைவார்த்து கொடுக்கக்கூடாது
என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் நாங்கள் மக்களுக்கு ஓர் சிந்தனையை முன்வைக்கின்றோம்.
அது என்னவென்றால், இப்பொழுது மத்திய அரசாங்கம் தேசிய மக்கள் சக்தியின் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, தோழர் அநுரவின் கைகளில் நாடு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் தங்களுடைய தேர்தல் சுலோகமாக ‘அநுரவோடு நாடு’ என்று அறிவித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலிலும், பொது தேர்தலிலும்கூட அநுரவுக்காகவே மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள். அந்த தேர்தல் முடிந்து விட்டது.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மத்தியில் ஆட்சியில் இருக்கின்றது. அவர்கள் மத்தியில் ஆட்சியில் இருக்கின்றார்கள் என்பதற்காக, எமது ஊர் சம்பந்தப்பட்ட விடயங்களை அவர்களிடம் கொடுக்க முடியாது. அது எங்களுடைய கையில் இருக்க வேண்டும்.
நாங்கள் ஒருபோதும் நாட்டின் ஆட்சியை பிடிக்கவோ அல்லது ஜனாதிபதியாவதற்கோ முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால், எங்களுடைய ஊரில் இருக்கும் அதிகாரங்களை நாங்கள் மற்றவர்களுக்கு தாரைவார்த்து கொடுக்கக்கூடாது.
ஆகவே, நாடு அநுராவுடன் இருக்கட்டும், எம் ஊர் எங்களுடன் இருக்கட்டும் என்ற சிந்தனையை நாங்கள் மக்களுக்கு முன்வைக்கின்றோம்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாம் ஏற்கனவே எடுத்துக் கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக தனித்துப் போட்டியிட்டு, பின்னர் கூட்டாக ஆட்சியமைக்க முடியும்.
பங்காளிக் கட்சிகளுடன் எமது தலைவர் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவித்தார்.
![]()