பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட போதிலும் பழிக்குப் பழியென தாக்குதல்கள் தீவிரம்; படுகொலைகள் தொடரலாமென பெரும் அச்சம்

நாட்டை உலுக்கிய புதுக்கடை நீதிமன்ற, மித்தெனிய மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடுகளுக்கு பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்த பின்னரும், மினுவாங்கொடை பத்தடுவன சந்திப்பில் நேற்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் ஒருவரை கொல்லும் நோக்கில் துப்பாக்கிச்சூடு நடத்திய அதே நேரம் பழிக்குப் பழியென
தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதால் படுகொலைகள் தொடரலாமென பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 36 வயதுடைய ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நடந்தபோது, சுடப்பட்ட நபர் முச்சக்கர வண்டி நிறுத்துமிடத்தில் இருந்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர், காயமடைந்தவரின் கால் மற்றும் கையில் சுடப்பட்டு கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கெஹல்பத்தர பத்மேவின் பாடசாலை நண்பர் என்பதும் தெரியவந்துள்ளது.
அண்மையில் புதுக்கடை நீதிமன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தில் ஈடுபடும் கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டதுடன், மித்தெனிய சம்பவத்தில் தந்தை மற்றும் பிள்ளைகள் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டிருந்தனர்.
கொட்டாஞ்சேனையில்யில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கடை உரிமையாளர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரும் பொலிஸ் விசாரணையின் போது, பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்த பின்னரும் பழிக்குப் பழியென
தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதால் படுகொலைகள் தொடரலாமென பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
![]()