வடக்கிற்கு மட்டும் ஏன் 6000 மில்.ரூபா ஒதுக்கு; ஏனைய மாகாணங்கள் புறக்கணிப்பு

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு 5000 மி. ரூபாவும், முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் நிர்மாணிப்புக்கு 1000 மில்லியன் ரூபாவும் என்ற அடிப்படையில் 6000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய மாகாணங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின்எம்.பி. சாமர சம்பத் தசநாயக்க குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய
அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஐசிங் பூசிய கேக்கினை முன்வைத்துள்ளார். குறிப்பிட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் இல்லையேல் பிரச்சினைகள் மாத்திரமே ஏற்படும்.
நலன்புரி கொடுப்பனவுகள் அதிகரித்துள்ளதை வரவேற்கிறேன். பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.களனி பல்கலைக்கழக மாணவர்கள் தான் கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணிக்கு ஆதரவாக செயற்பட்டு கடந்த அரசாங்கங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். களனியில் இருந்து கொழும்புக்கு பேரணியாக வருவார்கள். ஆகவே தற்போது அதிகரித்துள்ள கொடுப்பனவை மேலும் அதிகரிக்குமாறு கோருகின்றேன்.
எமது அரசாங்கத்தில் முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களின் சம்பளம் 2000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. ஆனால் இந்த வரவு செலவுத் திட்டத்தில் 1000 ரூபா மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு இது போதுமானதல்ல,
வடக்கு மாகாண அபிவிருத்திக்கு 5000 மி. ரூபாவும், முல்லைத்தீவுவட்டுவாகல் பாலம் நிர்மாணிப்புக்க 1000 மி. ரூபாவும் என்ற அடிப்படையில் 6000 மி. ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய மாகாணங்களுக்கு இவ்வாறு பாரிய நிதி ஒதுக்கப்படவில்லை. இது பெரும் அநீதி.புறக்கணிப்பு .அனைத்து மாகாணங்களுக்கும் அபிவிருத்திக்கு சமமான வகையில் நிதி ஒதுக்க வேண்டும்.
மக்கள் தமது குறைகளை எங்களிடம் கூறுவார்கள் . அந்த குறைகளை நாங்கள் அரசாங்கத்திடம் கூறுவோம் . அந்த குறைகளுக்கு முறையான தீர்வினை அரசு பெற்றுக் கொடுக்காவிடின் கோத்தபாய அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நிலையே இந்த அரசுக்கும் ஏற்படும் என்றார்.
![]()