இலங்கை

திருடர்களுடன் கூட்டணி அமைக்க வேண்டுமா? – ரணில் தரப்பை விமர்சித்த ஹிருணிகா

திருடர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லை எனக் கூறிக்கொள்ளும் நாமே திருடர்களுடன் கூட்டணி அமைக்க வேண்டுமா என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரகேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணைக்காக வருகை தந்த அவரிடம் ஊடகவியலாளர்கள் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எதிர்காலத்தில் சுயாதீனமாகவும் கௌரவமாகவும் அரசியல் பயணத்தை முன்னெடுக்க வேண்டும்.

‘அரகலய’வின் போது தமது சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதாகத் தெரிவித்து நட்டயீடு பெற்றுக் கொண்டவர்களின் பெயர் பட்டியல் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் வெளியிடப்பட்டது.

அந்த நிதியினை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே வழங்கியுள்ளார்.

நாம் திருடர்களுடன் கூட்டு சேர மாட்டோம் எனக்கூறியிருந்தோம்.இவ்வாறான பின்னணியில் இந்த திருடர்களுடன் இணைய வேண்டுமா?

ரணிலுடனோ அல்லது அவரது கட்சியில் உள்ளவர்களுடன் இணைந்து எமது அரசியல் பயணத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமா?

இரு கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து கதைத்துக் கொள்கிறார்கள். அது தொடர்பில் விமர்சிக்க நாம் விரும்பவில்லை. ஆனால் நாம் கட்சியின் உறுப்பினர்கள்.

எனவே இந்த கட்சிகள் இணையுமாயின் புதிய கூட்டணியின் தலைமை பதவி சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட வேண்டும்.

அதேபோன்று நாம் தொலைபேசி சின்னத்திலேயே களமிறங்க வேண்டும்.ஆனால் அதற்கு அவர்கள் விரும்ப மாட்டார்கள். நாம் அவர்களின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டுமா? எனவும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *