இலங்கையில் இருந்து அவசரமாக வெளியேறிய இஸ்ரேலிய சிப்பாய்

பாலஸ்தீனிய பிரஜை ஒருவரை கொலை செய்து அவரது உடலை இழிவுபடுத்தும் வகையில் செயற்பட்ட “டெர்மினேட்டர்” என்று அடையாளம் காணப்பட்ட இஸ்ரேலிய இராணுவ உத்தியோகத்தரான கெல் ஃபெரன்புக் என்பவர் இலங்கையில் தங்கியுள்ளதாகத் தகவல் வெளிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாக சனல் 12 ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த இஸ்ரேலிய சிப்பாய், பாலஸ்தீன ஆதரவு அமைப்பு ஒன்றினால்,அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி நபரைக் கைது செய்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு இலங்கை அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என மனித உரிமை குற்றங்களுக்கான நீதிக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஹிந்த் ரஜாப் என்ற அமைப்பு இவரது புகைப் படத்தை வெளியிட்டு, கோரியிருந்தது.
ஏற்கனவே இவருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் இவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கையை விடுக்குமாறு ‘இன்ரபோல்’ என்ற சர்வதேச பொலிஸாரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், கைது செய்யப்படுவதற்கு முன்னர் கொழும்பை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேலிய அதிகாரிகளிடமிருந்து ஃபெரன்புக்கிற்கு அவசர அழைப்பு வந்ததாக சனல் 12 தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், இஸ்ரேலுக்குத் திரும்பியதும் கெல் ஃபெரன்புக் ஒழுங்கு நடவடிக்கை அல்லது குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டுமா என்பது தொடர்பில் சனல் 12 கேள்வி எழுப்பியுள்ளது.
![]()