சிரியாவில் சிக்கிய 75 இந்தியர்கள் மீட்பு

சிரியாவில், அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, அந்நாட்டில் இருந்து 75 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் வணிக விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு திரும்பவுள்ளனர் என்று, இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
மீட்கப்பட்டவர்களில் ஜம்மு காஷ்ரீரை சேர்ந்த 44 ஜைரீன்கள் அடங்குவர். இவர்கள் சிரியாவின் சைதா ஜைனாபில் சிக்கியிருந்தனர்.
சிரியாவில் சிக்கித் தவித்த இந்தியர்கள் கோரிக்கையை ஏற்கும் வகையில், அங்குள்ள பாதுகாப்பு விடயங்களை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வெளியுறவு துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியர்களை மீட்கும் பணிகளை டமாஸ்கஸ் மற்றும் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டன. இதன் முதற்கட்டமாக 75 பேர் மீட்கப்பட்டுள்ள போதிலும், சில இந்தியர்கள் சிரியாவில் உள்ளனர்.
சிரியாவில் உள்ள இந்தியர்கள் டமாஸ்கஸில் உள்ள தூதரகத்துடன் +963 993385973 என்ற உதவி எண்ணிலும், வாட்ஸ்அப்பிலும், மற்றும் hoc.damascus@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் தொடர்பில் இருக்குமாறு, இந்திய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
![]()