இந்தியா

2060 களில் இந்தியாவின் மக்கள் தொகை 170 கோடியாக உயரும்; ஐக்கிய நாடுகள் சபை

இந்தியாவின் மக்கள்தொகை 2060களின் முற்பகுதியில் 170 கோடியாக உயரும் என்றும் இந்த நூற்றாண்டு முழுவதும் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறையின் மக்கள்தொகை பிரிவு உலகின் மக்கள்தொகை தொடர்பாக நேற்று (ஜூலை 11) தனது அறிக்கையை வெளியிட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தற்போது (2024ல்) உலக மக்கள்தொகை 820 கோடியாக உள்ளது. வரும் 50-60 ஆண்டுகளுக்கு உலகில் மக்கள்தொகை தொடர்ந்து பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2080 களின் நடுப்பகுதியில் சுமார் 1030 கோடியாக அதிகரிக்கும். உச்சத்தை அடைந்த பிறகு, உலக மக்கள்தொகை படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகின் மக்கள் தொகை 1020 கோடியாக குறையும்.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்த சீனாவை கடந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளிய இந்தியா, 2100 ஆம் ஆண்டு வரை அந்த இடத்தில் தொடரும். அந்த வகையில், இந்த நூற்றாண்டு முழுவதும் உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மக்கள்தொகை 2060 களின் முற்பகுதியில் 170 கோடியாக அதன் உச்சத்தை எட்டிய பிறகு நூற்றாண்டின் இறுதியில் 12% குறையும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *