ராஃபா இஸ்ரேலின் படையெடுப்பு தீவிரம்: அகதி முகாம் மீதும் தாக்குத்தல்

இஸ்ரேலிய போர் விமானங்கள்  செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) நடத்திய தாக்குதலில் மத்திய காஸாவின் இரண்டு அகதி முகாம்களைச் சேர்ந்த 17 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

தென் பகுதி காஸாவின் ராஃபா நகருக்குள் இஸ்ரேலிய பீரங்கிகள் அடுத்தடுத்து முன்னேறிச் செல்லும் வேளையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்று உள்ளது.

ராஃபாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பீரங்கிகளில் இருந்து போர் விமானங்களில் இருந்தும் குண்டுகள் மழைபோலப் பொழிந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக, மே மாதத்திற்கு முன்பு ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் அகதிகளாக அடைக்கலம் புகுந்த பகுதிகளில் தாக்குதல் தீவிரமாக நடத்தப்பட்டதென அவர்கள் கூறினர்.

அந்த நகருக்குள் இஸ்ரேலியப் படைகள் நுழைந்ததில் இருந்து அங்கிருந்த பெரும்பாலான மக்கள் நகரின் வடக்குப் பக்கமாக தப்பி ஓடிவிட்டனர்.

“உலக நாடுகளின் எந்தவொரு தலையீடும் இன்றி ராஃபா நகர் கடுமையாகக் குண்டுவீசித் தாக்கப்படுகிறது. இஸ்ரேலியப் படை அங்கு சுதந்திரமாக தாக்குதலில் ஈடுபடுகிறது,” என்று ராஃபா நகர் குடியிருப்புவாசி ஒருவர் கைப்பேசிச் செயலி வாயிலாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

ராஃபாவின் மேற்கு வட்டாரத்தில் அல்-சுல்தான், அல்-இஸ்பா, ஸுருப் ஆகிய பகுதிகளிலும் நகரின் மையப் பகுதியில் உள்ள ஷாபோராவிலும் பீரங்கிக் குண்டுகள் மூலம் சரமாரியாகத் தாக்குதல் நடத்தப்படுகிறது.

எகிப்துடனான எல்லைப் பகுதியையும் முக்கியத்துவம் வாய்ந்த ராஃபா எல்லை கடக்கும் பகுதியையும் இஸ்ரேல் ஆக்கிரமித்து வருகிறது.

“கிட்டத்தட்ட எல்லாப் பகுதிகளையும் இஸ்ரேல் ஆக்கிரமித்துவிட்டது. கடுமையான எதிர்ப்பு கிளம்பினாலும் அதனை அவர்கள் சமாளிக்கிறார்கள்.

“ஆக்கிரமிப்பு என்பது முறைகேடான செயல். நகரத்தையும் அகதி முகாமையும் அவர்கள் அழிக்கிறார்கள்,” என்று அந்தக் குடியிருப்புவாசி தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button