இலங்கை

மகிந்தவும் கைது செய்யப்படுவார்;  உதய கம்மன்பில கூறுகிறார்

சிறையில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர், மகிந்தவுக்காகதான் அதனைச் செய்தோம், அவரிடம் தான் பணத்தைக் கொடுத்தோம் என பொய்யாக வாக்குமூலம் வழங்கினால், மகிந்த ராஜபக்ச கைது செய்யப்படுவார் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று இப்படித்தான் நியாயமற்ற முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அநுராதபுரத்தில்  இடம்பெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் மக்கள் பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்தவொரு சாட்சியங்களும் இன்றி இந்த அரசாங்கம் நாமல் ராஜபக்சவை கைது செய்துள்ளது. இதுதான் சட்டமா?.

தற்போது சிறையில் இருக்கும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள், மகிந்த ராஜபக்சவுக்காகதான் நாங்கள் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டோம், அவரிடம் பெருந்தொகை பணத்தினைக் கொடுத்துள்ளோம் என சாட்சியளித்தால் என்ன நடக்கும்.

அந்த போதைப்பொருள் வர்த்தகர்கள் அரசாங்கத்தின் சாட்சியாளர்களாக மாறுவார்கள். எமது தலைவர் மகிந்த சிறையில் அடைக்கப்படுவார். இது மிகவும் ஆபத்தான ஒரு விடயம்.

வாயில் பிட்டு வைத்திருப்பது போல அமைதியாக இருக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் நான் ஒன்றை கூற விரும்புகின்றேன்.

இந்த லொத்தர் சீட்டிழுப்பில் சிறைக்குச் செல்லப்போகும் அடுத்த அதிர்ஷ்டசாலி நீங்களாக இருக்கலாம். தவறு செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், உள்ளே செல்ல வாய்ப்புக்கள் உள்ளன.

ஹிட்லர் காலத்து கெஸ்டபோ பொலிஸாரும், அநுர குமார வசம் இருக்கும் பொலிஸாரும் ஒன்றுதான். சட்டம் சமமாக பிரயோகப்படுத்தப்படவில்லை.

தற்போது இருக்கும் அநுர குமாரக்களும், விஜித ஹேரத்களும், லால் காந்தக்களும், வசந்த சமரசிங்கக்களும் இன்று கோடீஷ்வரர்களாக மாற கறுப்புப் பணமே காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *