காணாமல் ஆக்கப்பட்டோருக்காக லண்டனில் ஒலித்த தமிழர்களின் குரல்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நீதி கோரியும், இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்களுக்கு எதிராகவும் லண்டனில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச சமூகத்தின் கவனத்தை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலைமை தொடர்பில் ஈர்க்கும் நோக்கில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முதற்கட்டமாக, காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதனை தொடர்ந்து பிற்பகல் 12 மணியளவில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் கண்டனப் பேரணி ஆரம்பமானது.
பல்வேறு கோரிக்கைகளையும் பதாகைகளையும் ஏந்தியவாறு முன்னெடுக்கப்பட்ட இந்தப் பேரணி, லண்டன் நகரின் முக்கிய வீதிகள் ஊடாக பயணித்து, ஐக்கிய இராச்சிய பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள 10 Downing Street முன்பாக பிற்பகல் 2 மணியளவில் நிறைவடைந்தது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளின் நிலைமை தொடர்பில் சர்வதேச சமூகத்தின் உடனடி கவனத்தை ஈர்ப்பதுடன், அவர்களுக்கான நீதி, உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த மாபெரும் போராட்டத்தில் லண்டனில் வாழும் ஈழத்தமிழர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் பெருமளவில் கலந்து கொண்டு தமது ஆதரவையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.
“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும்; உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்; குற்றவாளிகள் பொறுப்புக்கூற வேண்டும்” என்ற கோரிக்கைகள் போராட்டத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்டன. சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளான இன்று, தாயகத்திலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதிக்குரல் லண்டன் வீதிகளில் மீண்டும் வலுவாக ஒலித்தது.
![]()