ஜனாதிபதியை ஏன் ‘சார்’ என்று அழைப்பதில்லை; அமைச்சர் ஹந்துன்னெத்தி விசனம்

சமுதாயத்தின் சில பிரிவினரிடமிருந்து முன்னாள் ஜனாதிபதிகளுக்குக் கிடைத்த அதே வகையான ஏற்பும் மரியாதையும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு கிடைக்காதையிட்டு கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி ஆத்திரமடைந்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற பகிரங்கக் கூட்டமொன்றில் உரையாற்றிய ஹந்துன்னெத்தி, வெளிப்புறத்திலிருந்து ஒருவர் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டதால், அதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தயங்குவதாகக் கூறினார்.
“மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, அவரை ஜனாதிபதி ராஜபக்ஷ என அழைப்பதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. ரணில் ஜனாதிபதியாக இருந்தபோதும் அவரை அப்படித்தான் அழைத்தோம். ஆனால் தற்போது அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக வந்துள்ள நிலையில் சிலர் அவரை அவ்வாறு அழைக்கத் தயங்குகிறார்கள். அவரை ‘சார்’ என்றோ அல்லது ‘ஜனாதிபதித் துமா’ (ஜனாதிபதி அவர்கள்) என்றோ அழைக்க அவர்கள் விரும்பவில்லை. ஏனெனில் அவர்களுக்குள் ஒரு மனத் தடை (complex) உள்ளது.
மேலும், அனுர குமார திசாநாயக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,” என்று அவர் உணர்ச்சிப்பூர்வமான உரையில் தெரிவித்தார்.
ஜே.வி.பி. ,என்.பி.பி கட்சியைச் சேர்ந்தவர்களே ஜனாதிபதியை ‘ஜனாதிபதித் துமா’ அல்லது ‘சார்’ என்று அழைக்காமல் தொடர்ந்து ‘சகோதரயா’ (சகோதரர்) என்று அழைத்து வரும் நிலையில், ஜனாதிபதியின் பெயருடன் எந்தவொரு பட்டப் பெயரையும் பயன்படுத்தாத முன்மாதிரியை அவர்தம் சொந்தக் கட்சியே உருவாக்கியுள்ளது.
ஹந்துன்னெத்தி திடீரென இத்தகைய யதார்த்தத்தை உணர்ந்து கொண்டிருப்பது விசித்திரமானது மட்டுமல்லாமல், மற்றவர்களின் மனநிலையை விடவும் பல விஷயங்களை வெளிப்படுத்துவதாக உள்ளதாகவும் சில தரப்புகள் தெரிவிக்கின்றன.
![]()