முச்சந்தி

யாழ்ப்பாணத்தில் காக்கைதீவு குப்பை மேடு தீப்பற்றி எரிந்தமையினால் 200 குடும்பங்கள் இடம்பெயர்வு!

யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான குப்பை மேட்டில்   ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் எரிந்ததால் ஏற்பட்ட நச்சுப் புகை மற்றும் கடுமையான துர்நாற்றம் காரணமாக, நாவாந்துறை மற்றும் பொம்மைவெளி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் தற்காலிகமாகத் தமது வீடுகளை விட்டு வெளியேறி, நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்திருந்தனர்.

குப்பை மேட்டிலிருந்து பல மணி நேரமாக வெளியேறிய அடர்ந்த நச்சுப் புகை மண்டலம் காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் ஏற்கனவே சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் கடுமையான மூச்சுத்திணறலுக்கு உள்ளாகினர்.

தீயினால் எழுந்த புகை மூட்டம் காரணமாக யாழ்ப்பாணம் – அராலி பிரதான வீதியின் வழியேயான போக்குவரத்து நீண்ட நேரத்திற்குப் முற்றாகப் பாதிக்கப்பட்டதுடன், சாரதிகள் கடும் சிரமங்களுக்கு மத்தியிலேயே வாகனங்களைச் செலுத்தினர்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவுச் சேகரிப்பு நிலையம் அமைந்துள்ள இப்பகுதியானது, மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட எல்லையாகும்.

இதனால், “தமது பிரதேச எல்லைக்குள் குப்பைகளைக் கொட்ட வேண்டாம்” என மானிப்பாய் பிரதேச சபையினர் நீண்ட காலமாக மாநகர சபையிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

காக்கைதீவு பகுதியில் கழிவுகள் எவ்வித தரம் பிரிப்போ இன்றி, திறந்தவெளியில் பாரிய மலை போல் கொட்டப்பட்டு வருகின்றன.

இதனைப் பயன்படுத்தி சில தனியார் நிறுவனங்கள் மலசல கூடக் கழிவுகள் மற்றும் உணவகக் கழிவு நீரை இப்பகுதியில் திருட்டுத்தனமாக கொட்டிச் செல்வதால், இலையான்களின் தொல்லை மற்றும் நிலத்தடி நீர் மாசடைதல் போன்ற கடுமையான சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பிட்ட சில வார இடைவெளியில் இந்த காக்கைதீவு குப்பை மேடு தீப்பற்றுவதும், பின்னர் பல மணி நேரப் போராட்டத்திற்குப் மத்தியிலேயே தீ அணைக்கப்படுவதும் பல வருடங்களாகத் தொடர்கதையாக நடந்து வருகின்றது.

நேற்று மாலை இடம்பெயர்ந்த மக்கள் இன்று (24) காலையிலேயே மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். எனவே, காக்கைதீவு, பொம்மைவெளி, நாவாந்துறை, ஆறுகால் மடம் மற்றும் நவாலியின் ஒரு பகுதி மக்களின் ஆரோக்கியத்தைக் கருத்திற்கொண்டு, இந்த ஆபத்தான குப்பை மேட்டை மக்கள் குடியிருப்பு அற்ற வேறொரு பகுதிக்கு உடனடியாக இடமாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button