நடுகைக்காரி 87…. ஏலையா க.முருகதாசன்

தனபாக்கியம் சிலம்பரசிக்கு நான் தீ;த்திறன் என, குத்தரிசிச் சோத்துடன் தடிப்பான குழ்மபாகக் காய்ச்சிய விளைமீன் கறித் துண்டினை குழைத்து மருமகளுக்குத் தீய்த்துக் கொண்டிருக்க அதை மனதால் இரசித்தபடி மாமனாரும் மைத்துனியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அவரைப் பற்றி இவரைப் பற்றி கதைக்கக் கூடாது மற்றவர்களின் முதுகில் அழுக்கிருக்கு என்று சொல்லுவதற்கு முன்னர் தங்கள் தங்கள் முதுகுகளைக் கவனிக்க வேண்டும் என்று சொல்லுபவர்களும்,போதாதற்கு தாம் பெரும் அறிவாளிகள் என மற்றவர்கள் தம்மைப் பற்றி நினைக்கட்டும் என்பதற்காக சாக்கிரட்டீஸின் தத்துவார்த்த வார்த்தையான உனை நீ அறி என்ற வார்த்தையையும்,திருக்குறளில்: இருக்கும் ஏதிலார் குற்றம் போல என்ற திருக்குறளையும் சொல்பவர்களே தமது வீட்டுக்குள் வீட்டில் உள்ளவர்களுடன் அவரைப் பற்றி இவரைப் பற்றிப் பேசுவதில் மாங்காயத் துண்டுகளை வெட்டி உப்பும் மிளகாயும் அளவாகப் போட்டு பல்லுக்கூச உருசித்துச் சாப்பிடுவது போல மற்றவர்களின் இரகசியங்களைப் பேசுவதில் இன்பம் காண்பவர்கள்
ஒரு ஊருக்குள் உள்ளவர்களில் யார் யார் அடுத்தவர் பிரச்சினைகளை பல்லுக்கு மேலை நாக்கைப் போட்டு கதைப்பவர்களென்றால் எவருமே அந்த விசயத்தில் சைபர் எடுக்க மாட்டார்கள்.
மதவடியிலும்,தேத்தண்ணிக் கடைகளிலும்,வயலுக்குள்ளை புல்லப் பிடுங்கேக்கிலையும்,வெங்காயம் நடும்பொழுதுகளிலும் மட்டுமல்ல ஊருக்குள் ஒத்துக்குப்புறமாக இருக்கம் கள்ளுக்கடைகளிலும் குடிச்சு வெறியேறியதும்,சோமபானத்தின் உற்சாகம் உடலுக்கு எழுச்சி கொடுக்க தமக்கு வேண்டாதவர்களையும்,வெறுப்புக்குரியவர்களையும் பற்றி ஒருவாய் கதைத்தால்தான் அவைக்கு பொச்சமடங்கும் என்பது போல வேண்டாதவர்களில் யாராவது தவறணைக்கு வந்தால் பக்கத்திலிருக்கும் சகபாடிக்கு ஒரு செருமல் சிக்னல் கொடுப்பதும்,வந்தவரின் வீட்டில் விளாமரம் நிற்குமானால் என்ன சேனாதி சுண்ணாகச் சந்தையிலை விளாம்பழங்களுக்கு நல்ல கிராக்கி என்று நக்கல் நளினம் விடுவதம் அதனாலை வாக்குவாதங்கள் சிறு சண்டைகள் வந்து வார்த்தைகள் தடித்து வெளிப்படையாகப் பேசுவதற்கு தாமாகவே தடை போட்டு வைத்திருக்கும் மறைவிட உறுப்புகளின் பெயர்கள் வருவதுமுண்டு.
அவரவர்களுக்கு இந்தத் தகுதிக்குப் போடப்படும் புள்ளிகளில் ஏற்ற இறக்கம் இருக்குமோ தவிர எல்லாரும் புள்ளிகள் பெறக்கூடிய ஊர்கதை பேசும் தரத்தில்தானிருப்பார்கள்.
கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலம் எவ்வாறு அவரவர் பாடங்களில் அவரவர்க்கு என்னெ;ன புள்ளிகள் இட்டு மாணவர்களைச் சித்தியடையச் செய்கிறார்களோ அது போல ஊர்களுக்குள் அரவர்க்கு புதினம் கதைப்பதில் என்னென்ன தகுதியை எட்டியிருக்கிறார்கள் என்பதைக் கவனித்து வைத்திருப்பார்கள்.

மற்றவர்களை கணிப்பவரை மற்றவர்கள் கணிப்பார்கள்.ஐஞ்சு பேர் ஓரிடத்திலிருந்து கதைப்பார்கள்,ஒவ்வெருவராக, ஒவ்வொருவரும் அந்த இடத்தைவிட்டுப் போகப் போக மிகுதியானவர்கள் போனவர்களைப் பற்றிக் கதைப்பார்கள்.இதுதான் ஊர்.
கொஞசக் கொஞ்ச நாளைக்கு கொஞ்சக் கொஞ்ச ஊர்ப்புதினங்கள் வாயில் அவலாக சுவைபடும்.இந்த விடயத்தில் எல்லோருமே ஒரே மாதிரியானவர்கள்தான்;:,வெள்ளைவேட்டிக் கள்ளர்களும் ஊருக்குள் பரந்திருப்பார்கள்.மிதிச்ச இடத்து புல்லும் சாகாது என்பார்களே அவர்களும் ஊர்ப்புதினம் கதைப்பதில் வல்லவர்கள்தான்.
கசங்கிள வேட்டியும்,தொளிலை மண்வெட்டியும்,கடகம் கொண்டு போகிறவர்கள்,குடிப்பவர்கள் என இவர்கள் மட்டுந்தான் புதினம் புடுங்கிகளல்ல அழகாக வெள்ளை வேட்டி உடுப்பவர்களும் புதினம் புடுங்கிகளே.
தினத்தந்தி நாகம்மாவுக்கு ஊர்க்கதை கதைப்பதற்கு செய்திக்கான கரு இல்லாததால் தவித்துக் கொண்டிருந்த வேளையில் தெல்லிப்பழைப் பலநோக்கச் சங்கத்தின் புடவைக்கடையில் சிலம்பரசி பார்வதியிடம் வாக்குவாதப்பட்டு வார்த்தைகளைவிட அது பெரிதாகி இதுவரை நாட்களும் சிதம்பரப்பிள்ளை தனபாக்கியத்தின் மகனான முருகதாசன் மட்டுமே வந்து போய் கொண்டிருந்த வீட்டுக்கு அன்று சிலம்பரசியும் தனபாக்கியமும் முருகதாசனின் தங்கச்சியாரான மங்களேஸ்வரியுடனும் வந்ததை ஒழுங்கை வேலியில் தெரியம் தலையை வைச்சு,நடக்கும் போது தலை வேலிக்கங்கால் அசையும் விதத்தையும் கணக்குப் பண்ணிச் சொல்லக்கூடிய ஞான அறிவு தினத்தந்தி நாகம்மாவுக்கு உண்டு.
பக்கத்து அயலியும் வேலிக்காரியமான விறாந்தையில் நின்ற செல்லாச்சியின் கவனத்தைத் திருப்புவதற்காக,தனபாக்கியம்,சிலம்பரசி,மங்களேஸ்வரி மூவரும் அவர்களின் கேற்றைத் திறந்து உள்ளே போனதும் மெய்யே செல்லா இண்டைக்கு மழை வரப் போகுது போல என்று வேலிக்கங்காலை கேட்ட தினத்தந்தி நாகம்மாவின் குரல் செல்லாச்சிக்கு மட்டுமல்ல,தனபாக்கியத்துக்கும் சிலம்பரசிக்கும் மங்களேஸ்வரிக்கும் கேட்க, என்னம்மா இப்படி வெயில் எறிக்குது நாகம்மா மாமி மழை வரப் போகுது என்று சொல்லிக் கொண்டிருக்கிறா எனக் கேட்க,அவ என்ன அர்த்தத்தில் கதைக்கிறா என்று எனக்குத் தெரியம் நீ அண்ணியைக் கூட்டிக் கொண்டு உள்ளைவா எனச் சொல்லிக் கொண்டே தனபாக்கியம் வீட்டுக்குள்ளை போகிறார்.
வெளி விறாந்தையில் சிதம்பரப்பிள்ளை தலைகணியை சுவரோடு சாத்தி வைச்சிட்டு கண்ணயர்ந்தவரை அம்பனை வயலைத் தாண்டி வந்த காற்று தேகத்தில் பட்டுச்: சுகம் கொடுக்க,கண் மடல்கள் இழுத்துப் பிடிச்சு நித்திரையாக்கினவரை மனைவி மகள் மருமகள் மூவரும் கேற்றைத் திறந்து முற்றத்தடிக்க வரும் அசிகை கேட்டு கஸ்டப்பட்டுக் கண்களைத் திறந்து பார்க்கிறார்.
மனைவி மகளுடன்,மகனின் மனைவியான மருமகள் சிலம்பரசி வருவதையும், வழமையாக அவளிடமிருக்கும் கொஞ்சம் ஆணவமான கம்பீரமான பார்வை இல்லாமல் கண்களைச் சுற்றி அழுதுகளைத்த கண்களுக்கு இருப்பது போல கண்கள் தாண்டு சாதுவாக கருமை படர்ந்திருப்பதையும் ஒரே பார்வையில் கவனித்த மாமனாரான சிதம்பரப்பிள்ளை யூனியனில் ஏதோ வில்லங்கம் நடந்திருக்குமோ என எண்ணியவாறு என்ன ஏதாவது பிரச்சினையா என்பதை மனைவியிடம் கண்களால் கேட்க மனைவியும் பிறகு சொல்லுகிறன் என்பது போல கண்களால் கணவனுக்குப் பதில் சொல்ல,தகப்பனுக்கு கொஞ்சமாவது சாடைமாடையாகச் சொல்லுவோமே என்ற உடனடி முடிவில் சிலம்பரசியைப் பார்த்து அண்ணி அம்மாவுக்கு பின்னாலை உள்ளை போங்கள் என்று அவளைப் போகச் சொல்லவிட்டு அவளுக்குப் பின்னாலை வந்த மங்களேஸ்வரி,தன்னைத் தகப்பன் என்ன நடந்தது என்பது போல பார்க்கிறார் என்பதையுணர்ந்து தனது தலையை இடது பக்கமாகச் சரித்து கண்களையும் இடது பக்கமாகச் சரித்து கைகளை கிழக்குப் பக்கமாக மெதுவாகக் காட்டியபடி உள்ளே போகிறாள்.
அவர்களின் வீட்டுக்கு கிழக்குத் திசையில் கிட்டத்தட்ட ஒரு மைல் தூரத்தில் பலநோக்கக் கூட்டுறவச் சங்கம் இருப்பதையும் அங்கு சிலம்பரசி வேலை செய்வதால் அங்கைதான் அண்ணிக்குப் பிரச்சினை என்பதைச் சொல்லவே கண்களாலும் கைகளாலும் தகப்பனுக்கு விளங்கப்படுத்தியிருந்தாள்.
மத்தியானத்திலை சாப்பிட முந்தி கண்ணயர்ந்தால்: அமத்தலான நித்திரை அமத்தி உடம்பைப் பிய்ச்செடுத்திடும் என்று தெரிந்தும்,அம்பனைக் காற்றின் கைங்கரியத்தால் கண்ணயர வேண்டி வந்திட்து என்று யோசித்துக் கொண்டே சிதம்பரப்பிள்ளை பாயையும் தலைகணியையும் சுருட்டி எடுத்துக் கொண்டே வீட்டுக்குள் போகிறார்.

மாமியாருக்குப் பின்னால் போன சிலம்பரசி,மங்களேஸ்வரியிடம் எதுவுமே கேட்காமல் உரிமையுடன் மங்களேஸ்வரியின் அலுமாரிக்குள் தோய்ச்சு மினுக்கி வைச்சிருந்த பஞ்சாபி உடையை சாறியை மாத்தி எடுத்து உடுக்கிறாள்.
அதைக் கவனித்த தனபாக்கியம் இப்படி உரிமையாக எங்கடை மருமோள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறம் என்ற அவளின் நினைப்பு பூரிப்பாக முகத்தில் தெரிகிறது.
அவிழ்த்து வைச்ச சீலையை சிலம்பரசி மடிக்கவென்ற எடுக்க,அண்ணி நான் மடிக்கிறன் நீங்கள் இருங்கள் என்ற மகேஸ்வரி அண்ணியாரின் சீலையை மடிச்சுக் கொண்டே அண்ணி உங்கடை உயரத்துக்கும் தோற்றத்தும் நீங்கள் போட்டிருக்கிற பஞ்சாபிக்கும் நீங்கள் மிக அழகாய்த் தெரியிறியள் என்று சொன்னவள் அடுத்து அண்ணி இந்த அழகுதான் அண்ணையை உங்களிடம் சரணாகதியடைய வைத்திருக்குது என்று சொல்ல சிலம்பரசியின் முகம் வெட்கத்தில் மாதுளம்பழச் சிவப்புப் போல சிவக்கிறது.
மருமகளும் மகளும் குரலைத் தாழ்த்திக் கதைச்சாலும் அதை மாமனும் மாமியாரும் கேட்டுச் சந்தோசப்படுகினம்.
இப்படித்தான் வீடு பகிடியம் வெட்கமுமாக இருக்க வேண்டும் என சிதம்பரப்பிள்ளை மனசுக்குள் நினைச்சுப் பூரிப்படைகிறார்.
அப்பொழுது மாமி பசிக்குது காலமை அவளொருத்தியோடை அதுதான் அந்தப் பாறுவோடை பிடுங்குப்பட்டதால,பத்து மணி இடைவேளை நேரத்திலை போய் சங்கக் கன்ரீனிலை தேத்தண்ணியும் குடிக்கேலை வடையும் சாப்பிடலை,சிங்கநாயக மாமாவின்ரை மகள் சறோ வழமையாக என்னோடை வந்திருந்து கதைச்சுக் கதைச்சு தேத்தண்ணி குடிக்கிறவள் என்னவோ தெரியேலை இண்டைக்கு அவளும் ஞாபகப்படுத்தவில்லை என்ற சிலம்பரசி, அதுதான் சரியாகப் பசிக்குது என்று சொல்ல ,பிள்ளை இஞ்சை நீ உனக்குத் தேவையான அளவு போட்டு வடிவாச் சாப்பிடு,இது உன்ரை வீடு என்று மருமகளைப் பாசமாகத் தனபாக்கியம் கூப்பிடுகிறாள்.
சிலம்பரசி கூடத்தைவிட்டு அடுப்படிக்குள் எழுந்து வர மங்களேஸ்வரியும் அவளுடன் வருகிறாள்.சிதம்பரப்பிள்ளையும் அடுப்படிக்குள் வருகிறார்.
கணவன் சாப்பிட்டிட்டுத்தான் விறாந்தையிலை படுத்திருக்கிறார் என நினைச்சிருந்த தனபாக்கியம் சாப்பிடாமல் ஏன் கண்ணயர்ந்தனீங்கள் அது மொய்ப்பாக்கிவிடுமே எனச் சொல்ல,அம்பனைக் காத்து என்னை அமத்திவிட்டுது என்கிறார்.
அடுப்படிக்குள் சாப்பாட்டு மேசையிருந்தும் அதை யாருமே பாவிப்பதில்லை.சப்பாணி கட்டிக் கொண்டு,நிமிர்ந்திருந்து குனிஞ்சு சாப்பிடுவதையே எல்லோரும் விரும்பியிருந்தார்கள்.
சிலம்பரசி உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கியதும்,காலையில் சங்கப் புடவைக் கடையில் தனக்கும் பாறுவுக்கம் நடந்த வாக்குவாதம் அதற்குப் பிறகு சங்க முகாமையாளரும் அப்பொழுது அங்கிருந்த சங்கத் தலைவரும் தன்னை ஒரு கிழமைக்கு பணியிடை நிறுத்தம் செய்ததையும் அவள் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர அவளின் கண்களிலிருந்து கண்ணீர் சொரிய,சங்கத்திலை ஏதோ பாரதூரமாக நடந்திருக்குது போல என ஊகிச்சுக் கொண்ட சிதம்பரப்பிள்ளை ஒரு குத்து மதிப்பாக பிள்ளை நடந்ததை நினைச்சு மனதைக் குழப்பாமல் மலையே வந்தாலும் தலையே சுமக்க வேண்டும் என்பினம்,நடந்தது எதையும் மனதிலை போட்டு குழப்பாமல் சாப்பிடு பிள்ளை என்கிறார்.

சிலம்பரசிக்கு வலது பக்கத்திலிரந்த மங்களேஸ்வரி,அண்ணியாரின் தொடையில் கைவைத்து அறுதல்படுத்த மூவருக்கும் சாப்பாடு போட்டுக் கொடுத்து தானும் சாப்பிடுவதற்கு ஆயத்தமான தனபாக்கியம் மகளை அரக்கியிருக்கச் சொல்லிவிட்டு மருமகளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து தனது சேலைத்தலைப்பால் அவளின் கண்களைத் துடைச்சுவிடுகிறாள்.
சமைச்சுவிட்டு புடவைக் கடைக்குப் போகும் வேறு சீலையை உடுத்துக் கொண்டு போயிருந்தாள் .
வீட்டுக்கு வந்ததும் திரும்பவும் சமைக்கும் போது உடுத்திருந்த சீலைi உடுத்திருந்தாள்.அந்தச் சீலைத்தலைப்பால்தான் அழுது சொரிந்த மருமகளின் கண்களைத் துடைச்சுவிட சமையல் வாசமும் மாமியாரின் பாசமும் கலந்து சிலம்பரசியை நெகிழ வைக்கின்றது.
தனபாக்கியம் சிலம்பரசிக்கு நான் தீய்த்திறன் என குத்தரிசிச் சோத்துடன் தடிப்பான குழ்மபாகக் காய்ச்சிய விளைமீன் கறித் துண்டினை குழைத்து மருமகளுக்குத் தீய்த்துக் கொண்டிருக்க அதை மனதால் இரசித்தபடி மாமனாரும் மைத்துனியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அப்பொழுது அடுப்படி வசாலை நோக்கி யாரோ வந்து நின்று கொண்டிருப்பது தெரிய நால்வரும் வாசலை நோக்கித் திரும்புகின்றனர்.
(தொடரும்…)

![]()