தமிழ் மக்கள் வாழும் இடங்களை அபகரிக்கும் ‘கிவுல் ஓயா’ திட்டத்தை மீளாய்வு செய்யுங்கள்; இல்லையேல் நடைமுறைப்படுத்த இடமளியோம்

வவுனியா வடக்கில் கிவுல் ஓயா திட்டத்தை உடனடியாக மீளாய்வு செய்து, எமது மக்களுடனும் மக்கள் பிரதிநிதிகளுடனும் கலந்துரையடப்படவேண்டும். இல்லையேல் இத்திட்டத்தை செயற்படுத்தவோ நடைமுறைப்படுத்த நாம் ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதோ, விடப்போவதோ இல்லை என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டமொன்று மணலாறு பகுதியில் உள்ள மகாவலி அதிகாரசபையின் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வவுனியா முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேசசபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த கூட்டத்திற்காக திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேசங்களை சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர்கள், கமக்காரர் அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டாலும், தமிழ் பகுதிகளை சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர்கள், கமக்காரர் அமைப்புக்களுக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பில் கூட்டத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்தால் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.
மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் கிவுல் ஓயா திட்டம் தொடர்பிலான நீண்டதொரு ஆவண விளக்கத்தினை வழங்கியிருந்தார்.
இதன் பிற்பாடு பல்வேறு வாதப்பிரதிவாதங்கள்,திட்டம் தொடர்பில் இடம்பெற்றது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் நீண்டதொரு விளக்கத்தினை, பாதிக்கப்படும் தமிழ் மக்களின் சார்பாக நிகழ்த்தியிருந்தார். பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருந்தார்.
பிரதி அமைச்சர், பணிப்பாளர், திட்ட அதிகாரிகள் ஆகியோர் அவற்றிற்கு பதிலளிக்க முடியாது தடுமாறியிருந்தனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் பின்வரும் விடயங்களை முதன்மைப்படுத்தி பேசியிருந்தார்.
கிவுல் ஓயா திட்டமானது 1983இல் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களின் நீர்த்தேவையை பூர்த்திசெய்வதற்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலேயே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட முயற்சிக்கப்பட்டபோதும் அது கிடப்பில் போடப்பட்டது. அதாவது குறித்த பகுதியில் இதுவரை ஒரு போகம் விவசாயம் செய்யும் விவசாயிகள் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் இரண்டு போகம் விவசாயம் செய்யும் நிலையை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாக காணப்பட்டது.
இந்த திட்டத்தில் பயனடையும் தரப்பினர் பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக கிம்பிலிவெவ பகுதியில் 37 வீடுகள் நீருக்குள் மூழ்குகின்றமை உள்ளிட்ட பயனடையும் தரப்பினர் தொடர்பான விடயங்களே தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும், கிவுலு ஓயா நீர்தேக்கத்தின் நீரேந்து பகுதிக்குள் அகப்பட்டு பாதிக்கப்படும் வவுனியா வடக்கு தமிழ் மக்களின் பூர்வீக நிலமான வெடிவைத்தகல், மருதோடை ஆகிய தமிழ் கிராம சேவையாளர் பிரிவுகள் தொடர்பில் எதிவித விடயங்களும் இத்திட்ட முன்மொழிவில் குறிப்பிடப்படவில்லை என குற்றம் சாட்டினார்.
2011ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கடந்த 15 வருடங்களாக இரகசியமாக செய்யப்பட்ட இத்திட்டம் பற்றி தற்போது தான் மகாவலி அதிகாரசபை பகிரங்கமாக முதல் கலந்துரையாடலை செய்கின்றமை பற்றியும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார். அத்துடன் இக்கூட்டத்திற்கு கூட திட்டத்தால் பயன்பெறும் மக்களையும், தரப்பினரையும் அழைத்துள்ளீர்களே தவிர திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களையோ, தரப்பினரையோ அழைக்கவில்லையே. ஏன் இந்த பாரபட்சம் எனவும் கேள்வியெழுப்பினார்.
கிவுலு ஓயா நீர் தேக்கத்தின் நீரேந்துபகுதியானது வனவளதிணைக்களத்திற்கு சொந்தமான காடு என விளக்கமஇக்கப்பட்டது. இதன்போது குறுக்கீடு செய்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் வனவள திணைக்களத்தினால் தமது பகுதி என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்குள் எமது பூர்வீக குளங்கள் வயல் நிலங்கள் உள்ளதெனவும் இவ் இடங்களை விடுவித்தல் பற்றி இங்கிருக்கும் இரண்டு அரச அதிபர்களுடனும், மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களிலும் பலமுறை கோரியுள்ளேன். ஆனால் அவை எவற்றையும் வனவள திணைக்களம் இதுவரை விடுவிக்கவில்லை. ஆகவே நீரேந்து பகுதிக்குள் எமது விவசாய நிலங்கள் உள்ளது என தெரிவித்தார்.
2002இல் அரச அதிபராக இருந்த கணேஸின் காலப்பகுதியில் இப்பகுதியை சேர்ந்த பெரிய மருதோடைக்குளம், சிற்றாற்றுக்குளம், கல்லாற்றுக்குளம் ஆகிய மூன்று குளங்களையும் புனரமைத்து 2000 ஏக்கர் வயல்செய்கை மேற்கொள்ள நியாப் (NIAP) நிறுவனத்திற்கு திட்டமொன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் 2003இல் சிரான் (SIHRAN) நிறுவனத்தினூடாகவும் மற்றொரு திட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் தலையீட்டினால் அந்த இரண்டு திட்டங்களும் கைகூடவில்லை. தற்போது இந்த நிலங்களும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது எனவும் தெரிவித்தார்.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் 2330 ஹக்டயர் நிலம் நீருக்குள் மூழ்கும் என மகாவலி அதிகாரசபையால் சொல்லப்பட்டாலும், அவர்கள் சொன்னதைவிட மிக அதிகளவிலான அளவு நிலம் நீருக்குள் மூழ்கும் நிலை உள்ளது. இதுபற்றி அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.
நீர்த்தேக்கத்திற்காக காடுகளை அழிப்பதால் யானை – மனித மோதல் அதிகரிக்குமென இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும், தீர்வுகளும் பயனடையும் தரப்பினருக்கே குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, பாதிப்படையும் தரப்பினருக்கானது பற்றி குறிப்பிடப்படவில்லை. நீரேந்து பகுதிகள் ஊடாக தமிழ் மக்கள் வாழும் இடங்களை நோக்கியே யானைகள் செல்லும் நிலை ஏற்படுமென்பதுடன் அவர்களே இதனால் அதிக பாதிப்புக்களை எதிர்கொள்வார்கள்.
இத்திட்டமானது 2011ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசினால் வவுனியா வடக்கில் வாழும் மக்களைப்பற்றி கருத்தில்கொள்ளாமல் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். அதே திட்டத்தை இந்த அரசாங்கமும் மீளாய்வு ஏதும் செய்யாமல், எமது மக்களுடன் கலந்துரையாடாமல் நடைமுறைப்படுத்த முயல்வது இந்த அரசும் முன்னைய அரசாங்கங்கள் போல்தான் எனும் மனநிலையை எங்கள் மத்தியில் உருவாக்குகின்றது.
ஆகவே தயவுசெய்து இத்திட்டத்தை உடனடியாக மீளாய்வு செய்து, எமது மக்களுடனும் மக்கள் பிரதிநிதிகளுடனும் கலந்துரையடப்படவேண்டும். இல்லையேல் இத்திட்டத்தை செயற்படுத்தவோ நடைமுறைப்படுத்தவோ நாம் ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதோ, விடப்போவதோ இல்லை எனவும் தெரிவித்தார்.
![]()