முச்சந்தி

சீரற்ற வானிலை – இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் ஜனாதிபதி அவசர சந்திப்பு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்திலும் இந்நாட்டு வர்த்தக சமூகத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் நேற்று (29) இரவு முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் செயல்படுத்தும் வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி வர்த்தக சமூகத்திற்கு விளக்கமளித்ததோடு, அந்த நடவடிக்கைகளில் அவர்களிடமிருந்து பெறக்கூடிய ஆதரவு குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

மேலும், இந்த அவசரகால நிலைமையில் தொழில்துறையில் எழுந்துள்ள சவால்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரம் பின்னடைய இடமளிக்காமல், தொழில்துறையை தொடர்ந்து வலுவாக முன்னெடுக்க எடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

சுற்றுலாத் துறை, விமான நிலையங்கள், போக்குவரத்து ஆகிய துறைகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து வர்த்தக சமூகத்தினர் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்ததோடு, அனர்த்த நிலைமை தணிந்தவுடன் நாட்டில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தை சீர் படுத்தல், நெடுஞ்சாலைகள், பாலங்கள் உட்பட தெரிவு செய்யப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உட்பட பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கிரிஷான் பாலேந்திரன் உட்பட அதன் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *