பலதும் பத்தும்

வட கொரிய ஹேக்கர்கள் கிரிப்டோ திருட்டில் புதிய சாதனை

வட கொரிய அரசுக்காக வேலை செய்பவர்கள் எனக் கருதப்படும் ‘ஹேக்கர்’ எனப்படும் இணையத் திருடர்கள், ‘கிரிப்டோகரன்சி’ திருட்டில் புதிய சாதனை படைத்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுதும் கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயப் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இதில் பல மோசடிகளும் நடக்கின்றன.

அந்த வகையில், ஆசிய நாடான வட கொரியா, இந்த கிரிப்டோ திருட்டில் முதலிடத்தில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

‘லாசரஸ் குரூப்’ (Lazarus Group) எனும் பெயரில் அறியப்படும் இந்த ஹேக்கர்கள், கிரிப்டோ நிறுவனங்களின் வலைத்தளங்களை ஹேக் செய்து, கரன்சியை திருடி வட கொரியாவின் ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்கு நிதி அளிப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த லாசரஸ் குழு கடந்த பெப்ரவரியில், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயை தளமாகக் கொண்ட ‘பைபிட்’ (Bybit) என்ற கிரிப்டோ வர்த்தக நிறுவனத்தின் இணையத்தளத்தை ஹேக் செய்து, 13,000 கோடி (இந்திய மதிப்பில்) ரூபாயைக் கொள்ளையடித்தனர்.

இந்த ஆண்டில் இதுவரை, 30க்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்களை லாசரஸ் குழு நடத்தியுள்ளது.

அவர்கள் திருடிய கிரிப்டோகரன்சியின் மதிப்பு, 16,800 கோடி ரூபாய் ஆகும். இது கடந்த ஆண்டு திருடப்பட்ட 5,535 கோடி ரூபாயை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

திருடப்பட்ட கிரிப்டோகரன்சி, வடகொரியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதம் வரை பங்களிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த, 2017 முதல் இந்த லாசரஸ் குழு, 50,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான கிரிப்டோ கரன்சி கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button