பலதும் பத்தும்

பீர் குடித்தால் நுளம்புகள் கடிக்குமாம்; புதிய அறிவியல் கண்டுபிடிப்பு

பீர் குடிப்பவர்களை நுளம்புகள் கடிக்கும் வாய்ப்பு அதிகம் என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் உள்ள ராட்பூட் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழு ஒன்று, ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் ஒரு இசை விழாவில் பங்கேற்ற சுமார் 500 பேரை தங்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர். பங்கேற்பாளர்கள் அனைவரும் அவர்களின் சுகாதாரம், உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் விழாவில் அவர்களின் நடத்தை குறித்த வினாப்பட்டியலை நிரப்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

அதன்பிறகு, பங்கேற்பாளர்களின் கைகள் நுளம்புகள் நிறைந்த, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு கூண்டுக்குள் விடப்பட்டன. இந்தக் கூண்டில் சிறிய துளைகள் இருந்ததால், நுளம்புகளால் கையின் வாசனையை உணர முடிந்ததே தவிர, கடிக்க முடியவில்லை.

எத்தனை நுளம்பகள் கடிக்க முயற்சித்தன என்பதைக் கண்காணிக்க வீடியோ கேமரா பயன்படுத்தப்பட்டது. ஆய்வில் பீர் அருந்திய பங்கேற்பாளர்களை, பீர் அருந்தாமல் இருந்தவர்களை விட 1.35 மடங்கு அதிகமாக நுளம்புகள் ஈர்த்தன என்று கண்டறியப்பட்டுள்ளது.

நுளம்புகள் பீர் குடிப்பவர்களுக்கு அதிகப்படியான விருப்பத்தைக் காட்டின. ஒரு கிளாஸ் பீர் அருந்துவது உடலில் வியர்வையை அதிகரிக்கச் செய்கிறது மற்றும் உடலில் இருந்து எத்தனால் வெளியீட்டை ஏற்படுத்துகிறது.

இவை இரண்டும் நுளம்புகளை ஈர்க்கும் சிக்னல்களாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். நுளம்புகளின் ஈர்ப்புக்குப் பீர் மட்டுமல்லாமல் வேறு பல காரணிகளும் கண்டறியப்பட்டன.

தனியாக உறங்கியவர்களை விட துணையுடன் உறங்குபவர்கள் நுளம்புகளின் இலக்காக மாற அதிக வாய்ப்புள்ளது என்று கண்டறியப்பட்டது. தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடும்போது, உடல் வெப்பநிலை உயர்ந்து, லாக்டிக் அமிலம் வெளியேறுகிறது. இது நுளம்புகளுக்கு மிகவும் கவர்ச்சியான சமிக்ஞையை வெளியிடுகிறது.

மனித தோலில் உள்ள பாக்டீரியாக்களின் அளவு நுளம்புக் கடியை தூண்டுகிறது. குறிப்பாக, கணுக்கால் மற்றும் கால்களில் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும் இடங்களை நோக்கி நுளம்புகள் ஈர்க்கப்படுகின்றன.

இருப்பினும், தோலில் பல வகையான பாக்டீரியாக்கள் இருப்பது சில சமயங்களில் பூச்சிகளை விலக்கி வைக்கவும் கூடும். ஆய்வில் சில பழக்கவழக்கங்கள் நுளம்புக் கடியை குறைப்பதும் கண்டறியப்பட்டது.

சமீபத்தில் குளித்தவர்களிடமிருந்து நுளம்புகள் விலகி இருந்தன. சன்ஸ்கிரீன் பூசிய நபர்களை நுளம்புகள் தவிர்த்தன. இதைத் தொடர்ந்து பயன்படுத்துவது நுளம்பு கடியை குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவெடுத்தனர்.

மது மற்றும் போதைப்பொருட்களைத் தவிர்ப்பது, தனியாக உறங்குவது மற்றும் அடிக்கடி சன்ஸ்கிரீன் பூசுவது போன்ற விவேகமான பழக்கவழக்கங்கள் நுளம்புக் கடியின் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நுளம்புகள் வெறும் எரிச்சலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களைப் பரப்பி பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளன.

காலநிலை மாற்றத்தால் வெப்பமான சூழ்நிலைகள் உருவாவதால், ஐரோப்பா போன்ற பகுதிகளில் கூட நுளம்புகளின் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற சூழல் உருவாகிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button