இலங்கை

சர்வதேச கண்காணிப்பைக் கோருகையில் அதற்கான நிதி குறித்து விசேட கவனம் தேவை ; அம்பிகா சுட்டிக்காட்டு

மனிதப்புதைகுழி அகழ்வு செயன்முறையை சர்வதேச நிபுணர்கள் கண்காணிக்கவேண்டும் எனக் கோருகையில், அக்கோரிக்கையை முன்வைப்பவர்கள் எத்தகைய கண்காணிப்பைக் கோருகிறோம் என்பது தொடர்பில் தெளிவாக இருக்கவேண்டும். ஏனெனில் தடயவியல் மற்றும் மானுடவியல் உள்ளிட்ட துறைசார் நிபுணர்களின் பங்கேற்புக்கு அவசியமான நிதியை ஏற்கனவே நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் ஐ.நா.சபை வழங்கப்போவதில்லை. ஆகவே சர்வதேச கண்காணிப்பைக் கோருகையில், அதற்கு அவசியமான நிதி ஒதுக்கீடு தொடர்பில் விசேட கவனம் செலுத்தவேண்டுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா முகவரகத்தின் உறுப்பினருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டினார்.

செம்மணி சித்துபாத்தியில் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் ஐந்தாம் நாளாக திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டன. அதன்படி அம்மனிதப்புதைகுழியில் திங்கட்கிழமை வரையான காலப்பகுதியில் 33 எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேவேளை இவ்வழக்கில் முறைப்பாட்டாளரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்துக்கு பொலிஸ்காவலுக்கு மேலதிகமாக அம்மயானத்தின் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் ஐவர் பாதுகாப்பு மற்றும் மேற்பார்வைப் பணியில் ஈடுபடுவதற்கு நேற்று முன்தினம் யாழ் நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இருப்பினும் மேற்குறிப்பிட்டவாறு மனிதப்புதைகுழிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான அதிகாரங்கள் (பொலிஸாருக்கு இருப்பதைப்போன்ற அதிகாரங்கள்) மயானத்தின் அபிவிருத்திச்சங்க உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டிருக்காத நிலையில், அவர்களால் எவ்வாறு முறையாகப் பாதுகாப்பு வழங்கமுடியும் எனக் கேள்வி எழுப்பிய அம்பிகாசற்குணநாதன், இங்கு , பாதுகாப்பு வழங்கல்' என்பதன் ஊடாகக் கூறப்படுவது எதுவெனத் தெளிவாக வரையறுக்கவேண்டியது அவசியம் என்று சுட்டிக்காட்டினார்.

அதேவேளை மனிதப்புதைகுழிகளுக்கான பாதுகாப்பு வழங்கல் பணியில் இராணுவத்தினரை ஈடுபடுத்தமுடியாது எனத் தெரிவித்த அவர், இருப்பினும் பொலிஸார் இராணுவத்தினரைப் பாதுகாப்பதற்கு முற்படக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்ளடங்கலாக மக்கள் பொலிஸார் மீதும் நம்பிக்கை இழந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

இவ்வாறானதொரு பின்னணியில் மனிதப்புதைகுழி அகழ்வு செயன்முறையை சர்வதேச நிபுணர்கள் கண்காணிக்கவேண்டும் எனக் கோருகையில், அக்கோரிக்கையை முன்வைப்பவர்கள் எத்தகைய கண்காணிப்பைக் கோருகிறோம் என்பது தொடர்பில் தெளிவாக இருக்கவேண்டும்.

ஏனெனில் தடயவியல் மற்றும் மானுடவியல் உள்ளிட்ட துறைசார் நிபுணர்களின் கண்காணிப்பையும், பங்கேற்பையும் கோருவதாக இருந்தால், அதற்கு அவசியமான நிதியை ஏற்கனவே நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபை வழங்கப்போவதில்லை.

ஆகவே சர்வதேச ஒத்துழைப்பைப் பெறுவதற்கான போதிய நிதியை அரசாங்கமே ஒதுக்கீடு செய்யவேண்டும். எனவே சர்வதேச கண்காணிப்பைக் கோரும்போது இவ்விடயங்கள் தொடர்பில் கட்டாயமாக அவதானம் செலுத்தப்படவேண்டும் ; என்றும் அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தினார்.

Loading

One Comment

  1. சட்டத்தரணி திருமதி.அம்பிகா சற்கணநாதன் மனிதப்புதைகுழியின் அகழ்வு தொடர்பாக அதன் கட்டமைப்பு நடவடிக்கைகளில் நிதிசெலவினம் சம்பந்தமாகக் கூறியவை முற்றிலும் சரியானவையே.
    எம்மவர்கள் ஏதோ நடக்குது நடக்கிறது நடக்கட்டும் எமக்குச் சாதகமாக நடக்க வேணும் என நினைப்பார்களே தவிர அதுசம்பந்மாக இதனால் என்னென்ன சாதக பாதக விளைவுகள் ஏற்படும் அதை எவ்வாறு எல்லோரையும் திருப்திப்படுத்தி சரியான பாதையில் கொண்டு செல்வது என்பதற்கான தீர்க்கமான முடிவு எம்மிடம் இல்லவே இல்லை.அவரவர் தவறுகளை ஒப்புக் கொள்வஐத கௌரவக் குறைச்சலாக எண்ணி ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் ஒரு நடைமுறையை அரசியலாக எமது தமிழரசியல்வாதிகள் வகுத்து வைத்திருக்கிறார்கள்.

    இல்லையெனில் இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லையென கழுவுகிற மீனிலை நழுவுகிற மீனாக நழுவிவிடுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *