மக்களை முட்டாளாக்கிய திமுகவினர்…. பகுத்தறிவுத் தொடர்- 03… ஏலையா க.முருகதாசன்

திராவிடக் கட்சி பற்றியோ அதன் நீட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் பற்றியோ தமிழகத் தமிழர்கள் போல கருத்துப் பகிர்வோ கலந்துரையாடலோ விவாதமோ இலங்கைத் தமிழர்கள் செய்வதில்லை.அதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவையுமிருக்கவில்லை.
ஆங்காங்கே சொற்பளவில் மக்கள் மத்தியில் திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் ஆரம்ப காலத்திலிருந்த முற்போககுச் சிந்தனை மீதான சார்புநிலைப் போக்கு இருந்ததெனிலும் அதற்காக அவர்கள் எவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தினை இலங்கையில் அதற்கென ஒரு கிளையைத் தோற்றுவிக்க முனையவில்லை.
முனையவில்லை என்பதைவிட இலங்கைத் தமிழர்கள் தமிழகத் தமிழர்களைவிட முற்போக்னானவர்கள் பகுத்தறிவாளர்கள் என்பதும் ஒரு காரணமாகும்.
சாதியம்,சீதனம் போன்றவற்றுக் கெதிராக அதன் தவறுகளைச் சுட்டிக் காட்டியதால் திரு.ஈ.வே.இராசாமி அவர்கள் மீதும்,அவரினால் உருவான திராவிக் கட்சியின் நீட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதம் இலங்கையில் அங்கொன்றம் இங்கொன்றுமாக ஆதரவாளர்கள் இருக்கவே செய்தனர்.ஆனால் அவர்கள் ஆதரித்த கொள்கையை பரவச் செய்வதில் ஆர்வமும் காட்டவில்லை.
தமிழகத்தக்கு அப்பால் இலங்கையில் தமிழர்கள் மத்தியில் காணப்பட்ட சாதிய வேறுபாட்டினால் காணப்பட்ட தீண்டாமை,ஏழைப் பெண்களை வாட்டிவதைத்து,சீதனம் கொடுக்க முடியாமையால் பெண்களில் சிலரை முதிர் கன்னியாக்கியமை போன்றவற்றின் தாற்பரியமான சமூ எற்ற தாழ்வுச் சிந்தனையின் தவறுகளை,பெண்ணடித் தவறுகளை கற்றவர்களும் பலரும் சரியாகப் பகுத்து உணர்ந்தவர்களாக இருந்த போதும் சமூக ஒட்டத்தில்,தவறாக புரிந்து முனைந்த சமூகச் சீர்கேடுகளான சாதியம்,ஏற்ற தாழ்வுகள்,சீதனம் போற்றவற்றை இறுகப் பிடித்தவர்களாக இருந்தது என்பது என்னவோ உண்மைதான்.ஆனால் இலங்கையில் தமிழர் சமூகத்தில் காணப்பட்ட அனைவருக்கும் கல்வி என்ற உயர் கோட்பாடு வேற்றுமைகளை கவனத்தில் கொள்ளாத உயர் சிந்தனையைப் பிறப்பித்தது.
மனச்சாட்சிக்குத் தவறு என்று தெரிந்தும் ஊரோடு ஒத்தோடு என்பது போல தவறுகளுக்கு உடந்தையாக தமிழ்ச் சமூகம் இருந்தது என்பதை மறுக்க முடியாது.
இருப்பினும்,திரு.ஈ.வே.இராமசாமி அவர்களோ,திராவிட முன்னேற்றக் கழகமோ சொல்வது போல தமிழகத்தில் தமிழர்கள் மீதான ஆரியர்களின் மேலாண்மை போல இலங்கையில் எள்ளவம் பிராமணர்களின் மேலாண்மை இருக்கவில்லை.தமிழகத்தில் காணப்பட்ட சாதியக் கொடும்போக்கு இலங்கையில் சராசரியாகக் காணப்படவில்லை.
பிராமணர்களல்லாத தமிழர்களை தங்களின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ளுங்கள் என ஒரு போதும் பிராமணர்கள் சொன்னதுமில்லை.
இலங்கையில் கோவில்களில் நடைபெறும் பூசைகளில் காணப்படும் குறைகளையோ,தவறுகளையோ கோவில் நிர்வாகங்களே பூசகர்களுக்கு சொல்லியதும் உண்டு,உணர்த்தியதும் உண்டு.அதற்கான உரிமையும் தற்துணிவும் கொண்டவர்களாக பொதுமக்களும் இந்தார்கள்.
ஆங்காங்கே ஒரு சிலர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்த திரு.ஈ.வே.இராமசாமி அவர்களைக் கொண்டாடியிருக்கின்றர்.
இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களும் முற்போக்கானவர்கள்.உரிமைப் பிரச்சினை இனப் பிரச்சினை என்பவற்றால் இலங்கை தனது சமுதாய அழகினை இழந்து நிற்கின்றது.
என்னைப் பொறுத்தவரை எனக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குமான சில கொள்கைகளின் தொடர்பு என்பது எனது தாய்மாமன் வழியாகவும் எனது அண்ணன் வழியாகவுமே கிடைத்தது.
பிராமணியப் போக்கை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கோவில்களின் தேவையை அவர்கள் இருவரும் ஏற்றுக் கொண்டவர்கள்.எங்களை எங்கள் அயலில் உள்ளவர்கள் கொம்யூனிஸ்டுகள் என்றும் திமுககாரர்கள் என்று அவ்வப்போது சிரிதத்துக் கொண்டே சொல்வார்கள்.ஒரு போதும் எமது கொள்கைகளை வைத்து அயலவர்கள் எம்மை வெறுக்கவும் இல்லை.
எனது தாய் மாமன் முருக பக்தர்.முருகைனைப் பற்றி விதந்துரைத்துக் கொண்டேயிருப்பார்.எனக்கு முருகதாசன் என்று பெயர் வைத்தவரே எனது தாய்மாமன்தான்.தனது மூத்த மகளுக்கு முருகாதேவி என்றும் பெயர் வைத்தார்.
நானும் திமுகாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவனாயினும் கடுமையான போக்கு என்னிடம் இல்லை.பொதுவாக இன்றுவரை எங்கெல்லாம் சரியானவை இருக்கின்றதோ அவற்றை ஏற்றுக் கொள்ளுவேன்.ஒரு உணவுக் கடையில் பலவகையான உணவு இருக்கும் அதற்காக எல்லா உணவும் எமக்கு விருப்பமான உணவாக இருக்காது.எமக்கு விருப்பமான உணவை விரும்புவது போலவே கொள்கைகளையும் தேர்வு செய்ய வேண்டும்.
ஒரு கொள்கையின் மீது மூளைச்சலவை செய்யப்பட்டவன் மாதிரி இசைவாக்க நாடல் என்னிடம் இல்லை.எனது தாய்மாமனிடமும் அண்ணனிடமும் காணப்பட்ட தீவிரப் போக்கை நான் குறை சொல்லவில்லை.
அவர்களால்தான் பன்னிரண்டு வயதிலேயே திமுகவின் நூல்களை வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. புத்தகங்களில் காணப்படும் வழமையான கருத்துக்களுக்கு மாறாக திமுகவினரால் எழுதப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டு நான் வாசித்த புத்தகங்களில் இருந்தமை கண்டு அதன் மீது எனக்கும் ஈரப்பு ஏற்பட்டது என்னவோ உண்மைதான்.
ஆனால் காலப்போக்கில் அதன்மீதான சந்தேகங்கள் தொடங்கி கேள்விகளும் எழுந்தன.
திமுகாவின் முற்போக்குக் கருத்துக்களை உள்வாங்கிய அண்ணை தனது திருமணம் நடந்த 1964இல் ஐயர் இல்லாமல் திருமணம் நடந்ததை அறிந்த பலர் அதை ஒரு பேசுபொருளாக்கினர்.
இதே போல எனது தாய்மாமனும் தனது மூத்த மகளின் திருமணத்தை ஐயர் இல்லாமலே நடத்தினார்.இதில் இன்னும் ஒரு படி மேலாக அவர் வாழ்ந்த உரில் உள்ள பிள்ளையார் கோவில் பிரதமகுரு அவரின் வீட்டுக்கு வரும் போது கொடுக்கப்படும் திருநீறை வாங்க மறுத்ததுடன் குருவை விமர்சனமும் செய்திருக்கிறார்.
இதே வேளை எனது தாய்மாமன் எனது அண்ணை ஆகிய இருவரும் நீர்கொழும்பிலுள்ள கொச்சிக்கடை என்ற ஊரில் எங்களுடைய பெரியதாயாரின் வீட்டிலிருந்துதான் கொழும்புக்கு வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தனர்.
நானும் கிட்டத்தட்ட மூன்றுவருடங்களாக கொச்சிக்கடையிலும் சிலாபத்திலுமாக இருந்திருக்கிறேன்.
அன்றைய காலத்தில் எனது தாய் மாமனும் அண்ணையும் திமுக பத்தரிகைகள் சஞ்சிகைளான திராவிட நாடு,முரசொலி,முத்தாரம்,கோம்லாண்ட் என்ற ஆங்கிலப் பத்திரிகை ஆகியவற்றை வாங்கி வருவார்கள்.
மாலை வேளைகளில் பெரும்பாலும் வாங்கிவந்த பத்திரிகைகள் சஞ்சுpகைகளில் காணப்படும் செய்திகள்,திமுகாவின் செயல்பாடுகளை சிலாகித்தும் விதந்துரைத்தும் தாய்மாமனும் அண்ணையும் பேசும் போது வீட்டில் உள்ளவர்களும் அதனை உள்வாங்கி தத்தமது கருத்துக்களைக் கலந்துரையாடல்கள் மூலம் வெளிப்படுத்துவார்கள்.
பொதுவாக,பெரும்பாலான மக்களிடம் ஒரு வழமை இருந்து வருகின்றது.ஒருவர் சொல்லும் விடயத்தில் எந்தளவு உண்மை இருக்கிறது என்பதை உற்றுக் கூர்மையாக கவனிக்காது கண்ணை மூடிக் கொண்டே நம்பும் உளவியல் போக்கு உண்டு.
அவ்வாறு திரு.ஈ.வே.இராமசாமி அவர்களும்,திமுகவும் மக்களை எவ்வாறு முட்டாளாக்கினார்கள் என்பதைப் பார்ப்போம்.
முதலில் இன்னமும் என்: மனதில் திமுக பிரச்சாரம் செய்த ஒரு விடயம் அப்படியே பசுமையாக இருக்கின்றது.
தமிழகத்தில் உள்ள மக்களை காங்கிரஸ் ஆட்சி முட்டாளாக்கி வைத்திருக்கிறது என்பதற்கு கீழ்கண்டவாறு தவறாகப் பிரச்சாரம் செய்தனர்.
பகுத்தறிவாளர்கள் புத்திசாலிகள் எனத் தம்மை அடையாளப்படுத்துபவர்கள் அன்றைய தமிழகச் சமூகத்தில் ஊறிப் போயிருந்த பிற்போக்குவாத அடையாளங்களான சாதியம்,சீதனம் என்பவற்றுடன் ஆரியம் என்பவற்றையும் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் அன்று ஆட்சி செய்தவர்கள் மலசலகூடங்களில் ஆண் பெண் மலசலகூடங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக ஆண் பெண் படங்களை வரைந்து மக்களுக்கு எதுவுமே தெரியாத முட்டாளாக்கினார்கள் என்பது போல திமுகவினர் பிரச்சாரம் செய்தனர்.
இதில் பிற்போக்குவாதிகள் யாரெனில் திமுகவினர்தான் ஏனெனில்.பல நாடுகளில் அதுவும் அறிவியலில் மிக வளர்ச்சியடைந்த நாடுகளில் காணப்படும் பொதுக் கழிப்பிடங்களில் இன்றளவிலும்கூட ஆண் பெண் கழிப்பிடங்களை வேறுபடுத்திக் காட்ட ஆண் பெண் முகங்களையோ முழு உருவங்களையோ அந்தந்த கழிப்பிடங்களின் முகப்புச் சுவர்களிலோ கதவுகளிலோ பதிந்து வைத்திருக்கிறார்கள்.
எனவே தாம் சொல்வதையெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காகத் திமுகவினர் தாம் உலகளாவிய நோக்கோ பார்வையோ இன்றி மக்களை முட்டாளாக்கினார்கள் என்பது தெட்டத் தெளிவாகவே தெரிகின்றது.
(தொடரும்…)