இலங்கை

வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறைமையை உடனே அமுல்படுத்துமாறு நாமல் வலியுறுத்து

நாட்டின் எரிபொருள் கையிருப்பு குறித்த சரியான புரிதல் இன்றி அரசு மந்தகதியில் செயற்படுவதால் மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசின் முறையற்ற எரிபொருள் முகாமைத்துவம் மற்றும் கியூ.ஆர். முறைமை குறித்து கடுமையான விமர்சனங்களை ஊடகங்களிடம் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த காலங்களில் அமைச்சர்கள் எரிபொருளில் 150 ரூபா வரை கமிஷன் பெறுவதாகத் தற்போதைய ஆட்சியாளர்கள் குற்றம் சுமத்தினார்கள்.

இப்போது திருட்டு இல்லை என்றால், அந்த 150 ரூபாவைக் குறைத்து மக்களுக்கு ஏன் உடனடியாகச் சலுகை வழங்க முடியாது?

நிலக்கரி ஊழலால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டவே எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. உலகப் போரை ஒரு காரணமாகக் கூறி அரஸு தப்பிக்க முயல்கின்றது.

கடந்த அரசு கியூ.ஆர். முறைமையை அறிமுகப்படுத்தியபோது அதனைக் கடுமையாக விமர்சித்த அநுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதியானவுடன் தற்போது மீண்டும் அதே முறைமையையே கையில் எடுத்துள்ளார்.

ஜனாதிபதி தமக்குக் கணினித் துறை பற்றித் தெரியாது என்பதால், கியூ.ஆர். முறைமை பற்றித் தன்னிடம் கேட்க வேண்டாம் எனக் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தற்போதைய எரிபொருள் விலையில் ஓட்டோக்களைச் செலுத்த முடியாது. மருத்துவர்கள் மற்றும் ஓட்டோ ஓட்டுநர்கள் போன்ற அத்தியாவசியத் துறையினருக்கு நடைமுறைச் சாத்தியமான நிவாரணங்களை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு, ‘வீட்டிலிருந்தே வேலை செய்யும்’ முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இது குறித்து மேலதிக ஆய்வுகள் தேவையில்லை. கொரோனா காலத்திலேயே உலகம் முழுவதும் இம்முறை வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டது.” – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *