இந்தியா

டெல்லியில் நான்கு மாடி கட்டிடம் தீக்கிரையானதில் 7 பேர் உயிரிழப்பு

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் பகுதியில் உள்ள நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தென்மேற்கு டெல்லியின் பாலம் கிராமப் பகுதியில் அமைந்துள்ள மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள குடியிருப்புத் தொகுதியிலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. குடியிருப்பாளர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளையில் திடீரென தீ பரவியுள்ளது.

தரைத்தளத்தில் உள்ள மின்சார மீற்றர்களில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது. அங்கிருந்து தீயானது மிக வேகமாக கட்டிடத்தின் ஏனைய நான்கு தளங்களுக்கும் பரவியுள்ளது.

தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் டெல்லி தீயணைப்புத் துறையினர் பல வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். எனினும், அப்பகுதி மிகவும் குறுகிய சந்துகளைக் கொண்டமைந்ததால் தீயணைப்பு வாகனங்கள் உள்ளே செல்வதில் பெரும் சவால்களை எதிர்கொண்டன.

தீயில் கருகியும், மூச்சுத்திணறல் காரணமாகவும் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் சிறுவர்களும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கட்டிடத்திலிருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் சிகிச்சைக்காக அருகிலுள்ள ​வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு விரைந்த டெல்லி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த கட்டிடத்தில் முறையான தீயணைப்பு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும், மின்சாரக் கசிவுக்கான சரியான காரணம் குறித்தும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *