உதய கம்மன்பில கைதாவாரா?; அமைச்சரவை பேச்சாளர் கூறுவதென்ன

உதய கம்மன்பிலவுக்கு எதிராக மார்ச் 27ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் வழக்கு விசாரணையில் அவருக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாவிட்டால், அவர் கூறியதை போன்று மார்ச் 31ஆம் திகதி அவரால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்களை வெளியிட முடியுமாக இருக்கும் என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை மார்ச் 31ஆம் திகதி தான் வெளியிடுவேன் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ள நிலையில், அது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சரவை பேச்சாளர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எவருடையாவது கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகள் விசாரணைகளுக்கு இடையூறானது என்று பொலிஸார் அடையாளம் கண்டால் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் ஒன்றாக அரசாங்கத்தில் இருந்த மகிந்தானந்த அளுத்கமகே, நளின்பெர்னாண்டோ மற்றும் ஜோன்ஸ்டன் போன்றோர் சிறையில் இருக்கும் போது ஒன்றும் பேசாதவர்கள் இப்போது சுரேஷ் சலேவுக்காக பேசுகின்றனர்.
இதேவேளை மார்ச் 27ஆம் திகதி உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 20 மில்லியன் ரூபா ஊழல் மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. அதன்போது எந்தப் பிரச்சினையும் இருக்காவிட்டால் 31ஆம் திகதி அவரால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்களை வெளியிடலாம் என்றார்.
![]()