இலங்கை

தமிழரசுக் கட்சி முன்னுதாரணம்; அமைச்சர் பிமல் கூறுகிறார்

நாட்டின் எதிர்க்கட்சி எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கு தமிழரசுக் கட்சியை எதிர்க்கட்சிகள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்குமான ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளை தீர்மானித்தல் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறிய அவர் மேலும் பேசுகையில்,

பாராளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட விவாதத்தில் உரையாற்றும் போது தமிழரசுக் கட்சி எம்.பி.க்கள் நியாயமான வகையில் சாதக, பாதகங்களை எடுத்துக் கூறி சிறந்த உரைகளை நிகழ்த்துகின்றனர். விமர்சனங்களை முன் வைத்தாலும் அவர்கள் அதனை சிறந்த முறையில் முன் வைப்பதைக் காண முடிகிறது.அவர்களது உடல் மொழி கூட அதனை வெளிக்காட்டுகிறது.

ஆனால் சபையில் எதிர்க்கட்சியில் உள்ள சிலர் உரையாற்றும் போது மிகவும் மோசமான விதமாகவே உரையாற்றுகின்றனர். நாடு தொடர்பில் சிந்திக்காமல் தாம் இழந்த அதிகாரத்தை மீண்டும் எவ்வாறு கைப்பற்றுவது என்ற குறுகிய நோக்கத்துடனேயே அவர்கள் உரையாற்றுகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஏவும் ஏவுகணை இங்கு வந்து விழுந்தாவது தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியுமா என்ற சிந்தனையோடு செயற்படுகின்ற மிக மோசமான எதிர்கட்சியாகவே எதிர்க்கட்சிகள் காணப்படுகின்றன.

அவர்கள் எதிர்க்கட்சியாக எவ்வாறு செயற்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் முன்னுதாரத்தைப் பின்பற்ற வேண்டும் என்று நான் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *