9 ஆண்டுகளாக மக்களின் அடிப்படை உரிமை மறுப்பு; தேர்தலை நடத்துமாறு கரு ஜயசூரிய வலியுறுத்து!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமல் கடந்த 9 ஆண்டுகளாக நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளமை அநீதியான செயலாகும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் தமக்கான ஆட்சி அதிகாரத்தைக் கோரி நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர். அந்த உரிமையை அவர்களுக்கு வழங்குவதை நாம் ஒரு கடமையாகக் கருத வேண்டும்.
மாகாண சபைகள் இயங்காமல் அரச இயந்திரம் சரியாகச் செயற்பட முடியாது. அரச நிர்வாகக் கட்டமைப்பு முறையாக இயங்காத காரணத்தால் நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்குப் பெரும் தடை ஏற்பட்டுள்ளதை நாம் காண்கின்றோம். எனவே, மக்களின் இந்த உரிமையை உடனடியாக வழங்க வேண்டும்.
இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றச் சபை முதல்வர் மற்றும் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்கள் அனைவரும் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கருத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
எனவே, அனைத்துத் தேசிய மற்றும் பிராந்திய அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்தச் செயற்பாட்டை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.
அத்துடன், கடந்த தேர்தல்களின் போது வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது குறித்தும் நாம் அவதானம் செலுத்த வேண்டும். இதனை நிச்சயமாக ஒழிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். தனிப்பட்ட ரீதியில் அவரைச் சந்தித்த போதும் அவர் இதனை உறுதிப்படுத்தினார். இதன் மூலம் நாட்டில் ஒரு புதிய அரசியல் கலாசாரம் உருவாகும் என நாம் எதிர்பார்க்கின்றோம். – என்றார்.
![]()