இலங்கை

மத்திய கிழக்கு போர் நீண்டால் இலங்கைக்குப் பாரிய சிக்கல்! – மஹிந்த பகிரங்க எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலானது இலங்கையின் எதிர்காலத்துக்குப் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திஸ்ஸமஹாராம, அகுருகொட ஸ்ரீ மங்களராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சைத்தியத்தின் திறப்பு விழாவில் நேற்று கலந்துகொண்டதன் பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:-

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் சர்வதேச போர்ச் சூழல் நீண்ட காலம் நீடித்தால்,

அது இலங்கைக்குப் பாரிய சிக்கல்களை உருவாக்கும். இது நாட்டின் எதிர்காலப் பொருளாதார மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எமது ஆட்சிக்காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்கள் நாட்டுக்காக ஆற்றிய சேவையை மதிப்பதே முறையான செயலாகும்.

அதனை விடுத்து, அவர்களை மனிதாபிமானமற்ற முறையில் சிறையில் அடைப்பது ஏற்றுக்கொள்ள

முடியாதது. இது பழிவாங்கும் காலம் அல்ல.

தற்போதைய அரசு பௌத்த சாசனத்துக்கு ஏதாவது சேவை செய்கின்றதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

நாம் ஆட்சியில் இருந்தபோது பௌத்த சாசனத்தை மிக உயர் நிலையில் வைத்திருந்தோம். ஆனால் இன்று அது இரண்டாம் பட்சமாக நடத்தப்படுவதாகக் கருதப்படுகின்றது.

தற்போதைய அரசின் செயற்பாடுகள் குறித்துச் சொல்வதற்கு எதுவுமில்லை. என்னை விட நாட்டு மக்களுக்கே அது குறித்து நன்றாகத் தெரியும்.” – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *