அவசரப்பட்டு செய்யப்படும் ”சோதனைகள்” மக்களின் நம்பிக்கையைச் சிதைத்துவிடும்

56 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இலங்கை மின்சார சபையை, தெளிவான மூலோபாயம் இன்றி ஆறு அரச நிறுவனங்களாகப் பிரிப்பது அர்த்தமுள்ள சீர்திருத்தம் ஆகாது . அவசரப்பட்டுச் செய்யப்படும் சோதனைகள் பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைத்துவிடும்என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் எம்.பி.யுமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார் .
இது தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தெளிவான இடைக்காலத் திட்டங்கள் இன்றி இந்த நிறுவனத்தை உடைப்பது, நிர்வாகச் சிக்கல்களையும் நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கும்.மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான விடயம் தற்போது உயர் நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ள நிலையில், அதை மீறி முன்னெடுப்பது சுமார் 22,000 ஊழியர்களின் எதிர்காலத்தை நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளும்
தேசிய சொத்தாகக் கருதப்படும் ஒரு நிறுவனத்தைப் பிரித்துவிட்டு, அந்த நிறுவனங்களுக்குச் சேவை செய்யும் ஊழியர்களை அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என்று கூறுவது நிர்வாகக் குழப்பத்தை ஏற்படுத்தும்.மின்சார விநியோகம் என்பது நாட்டின் பொருளாதார மீட்பு, கைத்தொழில் வளர்ச்சி மற்றும் தேசிய பாதுகாப்புக்கு மிக முக்கியமானது.
எனவே, எவ்வித சீர்திருத்தங்களும் நிறுவனங்களை வலுப்படுத்துதல், மின் விநியோக ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல், ஊழியர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோரைப் பாதுகாத்தல் போன்ற அம்சங்களை உறுதிப்படுத்த வேண்டும் .”அவசரப்பட்டுச் செய்யப்படும் சோதனைகள்” பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைத்துவிடும் நிலைத்தன்மை, கட்டுப்படியான விலை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் நம்பகமான தேசிய எரிசக்தி மூலோபாயமொன்றையே நாடு எதிர்பார்க்கின்றது
![]()